தமிழக தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை கொண்டவர்கள்; 'SIR நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை'; திமுக எம்பி விமர்சனம்..!
DMK MP Criticizes SIR Procedure Following the Arrest of Foreign Nationals Who Voted in the Election
தமிழக தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட நபர்கள் முறைகேடாக வாக்களித்தது விட்டு நாடு திரும்பும் நிலையில், விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய சோதனையில் பலர் சிக்கியுள்ளனர். அவர்களது கைகளில் மை இருந்த நிலையில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். அதன்படி, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் சுமார் 17 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமைகள் பெற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தாலும் நடந்து முடிந்த எஸ்ஐஆர் பணிகளில் இவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டவிரோதமாக வாக்களித்தவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறதாகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுவதாக திமுக எம்.பி. வில்சன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட சுமார் 25 நபர்கள் முறைகேடாக வாக்களித்தது கண்டறியப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது.
தவறான அல்லது போலி ஆவணங்கள் மூலம் தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்று காட்டிக்கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது இவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்த்து, தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறை முழுமையான பாதுகாப்புடன் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டுகிறது. இத்தகைய நிகழ்வுகள் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையையும், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையும் நேரடியாகப் பாதிக்கிறது.

வாக்கெடுப்புக்கு முன்னும் பின்னும் நடைபெறும் Immigration மற்றும் Emigration குறித்த தகவல்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குடிவரவுப் பிரிவிடம் உள்ளதால், இந்த மிகப் பெரிய அளவிலான தேர்தல் மோசடி குறித்து சிபிஐ அமைப்பால் மட்டுமே விரிவான விசாரணையை மேற்கொள்ள முடியும்.
எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம், இது குறித்து சிபிஐ-யிடம் புகார் அளித்து, இந்த விவகாரத்தை முழுமையாக விசாரணை செய்ய வேண்டுமெனவும், இந்தியத் தேர்தலில் வாக்களித்த அந்த வெளிநாட்டு குடிமக்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இந்தியத் தேர்தல் ஆணையம், வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவில் வாக்களிப்பதைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன், அதற்கான வலுவான ஒழுங்குமுறைகளையும் உருவாக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK MP Criticizes SIR Procedure Following the Arrest of Foreign Nationals Who Voted in the Election