'போராட்டத்தில் காயமடைந்த மாணவர்களை சந்திக்க கூட அனுமதி மறுக்கும் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது'; திமுக ஆ.ராசா எம்.பி குற்றச்சாட்டு..!
DMK MP A Rasa says there is a tyrannical regime that is refusing to even allow him to meet students injured in the protest
நீட் தேர்வுக்கு எதிராக தலைநகரில் போராடி, காயம்பட்ட மாணவர்களைச் சந்திக்கக் கூட அனுமதி மறுக்கும் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டுருப்பதாக மத்தியில் ஆளும் பாஜக அரசை திமுக எம்.பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் காயமடைந்த மாணவர்களின் உறவினர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராசா கூறியதாவது; நீட் தேர்விக்கு எதிராக தலைநகரில் போராடிய மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை மற்றும் ஒடுக்குமுறையில் காயமடைந்த மாணவர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அவர்களை சந்தித்து நலம் விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவமனையினுடைய கண்காணிப்பாளரைச் சந்தித்த நேரத்தில், மாணவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களைப் பார்க்க அனுமதிக்க முடியாது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், காயமடைந்த மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்ற மருத்துவ சிகிச்சையைக் கண்காணிப்பாளரிடம் கேட்டறிந்ததாகவும், அவர்களுடைய உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களைச் சந்திப்பதற்கே சுகாதாரத் துறை அமைச்சரிடமிருந்து அனுமதி தந்தால்தான் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த மருத்துவமனையினுடைய கண்காணிப்பாளரை மத்திய அரசு மிரட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ''ஒரு நோயாளியைச் சந்திப்பதற்குக்கூட ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்றுத்தான் சந்திக்க வேண்டும் என்று ஒரு கண்காணிப்பாளர் சொல்கின்ற அளவுக்குகு, ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது'' என்று கடுமையாக சாடியுள்ளார்.
English Summary
DMK MP A Rasa says there is a tyrannical regime that is refusing to even allow him to meet students injured in the protest