திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி? இறுதி கட்டத்தில் பேச்சுவார்த்தை தீவிரம்! அசைன்மென்டை முடிக்கும் கனிமொழி - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இல்லத்தில், திமுக எம்பி கனிமொழி அவரை நேரில் சந்தித்து நடத்திய உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி அடிப்படையில் உறுதியாகியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி உறவு மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைந்த செயல்திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக நிலவி வந்த இழுபறி மற்றும் குழப்பங்களுக்கு இந்தச் சந்திப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் சில சிக்கல்கள் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்தப் பொறுப்பில் இருந்த கிரிஷ் சோடன்கருக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டிருப்பது, காங்கிரஸ் தரப்பு பேச்சுவார்த்தையை தீவிரமாகக் கையாள விரும்புகிறது என்பதைக் காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 40 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆனால் திமுக தலைமையின் நிலைப்பாடு அதற்கு உடன்படாததாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக 28 முதல் 30 தொகுதிகள் வரை மட்டுமே காங்கிரசுக்கு வழங்க முடியும் என்ற எண்ணத்தில் திமுக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பின் போது, காங்கிரஸ் தரப்பில் ‘ஆட்சியில் பங்கு’ (அமைச்சரவை இடங்கள்) தொடர்பான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு திமுக தலைமை திட்டவட்டமான மறுப்பைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரசுக்கு அமைச்சரவை இடங்கள் வழங்கப்பட்டால், மற்ற கூட்டணிக் கட்சிகளும் அதே கோரிக்கையை முன்வைக்கும் அபாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் எந்த சமரசமும் இல்லை என்பதைக் கனிமொழி, ராகுல் காந்தியிடம் தெளிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், கூட்டணி தர்மத்தை பாதிக்கும் வகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் கருத்துகள் தெரிவித்து வருவது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் நிர்வாகிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கனிமொழி முன்வைத்ததாகவும், அதற்கு ராகுல் காந்தி ஒப்புதல் அளித்து, தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தேவையற்ற கருத்துக்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், காங்கிரஸை அதிக தொகுதிகள் கோரத் தூண்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இருப்பினும், தவெகவுடன் இணைவது தொடர்பாக காங்கிரஸ் இதுவரை எந்தத் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், காங்கிரஸ் வேறு அணிக்கு செல்லாமல் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பதில் திமுக தலைமையும் மிகுந்த கவனத்துடன் பேச்சுவார்த்தைகளை கையாள்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மொத்தத்தில், திமுக – காங்கிரஸ் கூட்டணி அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் எட்டப்படும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Congress alliance confirmed Negotiations are in full swing Kanimozhi completes assignment


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->