திமுக கூட்டணியில் விரிசல்? தேமுதிகவின் தனித்த பிரசாரப் பயணம் - அதிருப்தியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள்!
DMDK Isolated Campaign Strategy Premalatha Selective Touring Rattles DMK Alliance
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் ஒரு புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு கடைசியாகக் கூட்டணியில் இணைந்த தேமுதிக-விற்கு, மற்ற மூத்த கட்சிகளைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது
ஏற்கனவே ஒருவித அதிருப்தியை உருவாக்கியிருந்தது. அந்த நெருப்பு இன்னும் அணையாத நிலையில், தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள பிரசாரப் பயணத் திட்டம், கூட்டணிக் கட்சிகளைப் பெரும் திகைப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
பிரேமலதாவின் இந்தப் பயணத் திட்டத்தின்படி, அவர் தனது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டுமே முழுமையான முன்னுரிமை அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள மற்ற கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேச அவர் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஏப்ரல் 15-ம் தேதி மட்டும் சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்ய அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அவர் முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பது, தேர்தல் களத்தில் ஒருவிதத் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வை மற்ற வேட்பாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசித்திரமான முடிவுக்குப் பின்னால் அரசியல் வட்டாரங்களில் இரண்டு விதமான காரணங்கள் அலசப்படுகின்றன. முதலாவதாக, கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது திமுக தலைமை அளித்த ஒரு முக்கியமான ரகசிய உறுதிமொழியை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதால், அதைக் கண்டிக்கும் விதமாகப் பிரேமலதா இந்த 'மென்மையான மோதல்' போக்கைக் கையில் எடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
அதே சமயம், பிரேமலதாவிற்கு நெருக்கமானவர்களோ, அவரது உடல்நிலை தற்போது முழு வீச்சில் மாநிலம் தழுவிய தீவிரப் பிரசாரத்திற்கு ஒத்துழைக்காததால் தான் பயணத் திட்டம் சுருக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கின்றனர்.
காரணம் எதுவாக இருந்தாலும், பிரேமலதாவின் இந்த அணுகுமுறை, தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைப் பாதிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தங்கள் தொகுதிகளுக்குப் பிரேமலதா வந்து வாக்கு சேகரிக்க மாட்டார் என்ற செய்தி, அந்தந்தப் பகுதி வேட்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு கூட்டணியாகக் களம் காணும் போது நிலவ வேண்டிய ஒற்றுமை இதில் மிஸ் ஆவதாகப் புகார்கள் எழுகின்றன. இந்த உட்கட்சி மற்றும் கூட்டணிப் பூசல்களை திமுக தலைமை எப்படிச் சரிசெய்யப் போகிறது என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
English Summary
DMDK Isolated Campaign Strategy Premalatha Selective Touring Rattles DMK Alliance