அரசியலமைப்பு பிரதியை கைகளில் ஏந்தியவாறு கர்நாடக முதல்வராக பதவியேற்ற டி.கே.சிவக்குமார்; துணை முதல்வரானார் ஜி.பரமேஸ்வரா..!
DK Shivakumar takes oath as Karnataka Chief Minister
கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற டி.கே.சிவக்குமார் அரசியலமைப்பு பிரதியை கைகளில் ஏந்தியவாறு பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவருக்கு ஆளுநர் தவார்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கர்நாடக முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பதவி விலகியதை அடுத்து, புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது.

டி.கே.சிவக்குமாரைத் தொடர்ந்து துணை முதல்வராக ஜி.பரமேஸ்வரா, அம்பேத்கரின் பெயரால் உறுதிமொழி அளித்து பதவியேற்றார். அவரை தொடர்ந்து கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சத்தீஷ் ஜரகிஹோலி, கிருஷ்ணா பைரேகவுடா, பிரியங்க் கார்கே, யு.டி.காதர், ஈஸ்வர் கந்தரே, யதீந்திர சித்தராமையா, பைரதி சுரேஷ், ஷரண் பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதமும், அதனைத் தொடர்ந்து கர்நாடக வாழ்த்துப் பாடலும் இசைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில், வந்தே மாதரம் பாடலும் தேசிய கீதமும் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
DK Shivakumar takes oath as Karnataka Chief Minister