ஜனநாயகமா...? பணநாயகமா...? ரூ.15 கோடி முதலீடு செய்து மக்கள் சேவையா...? - தேர்தல் அரசியலை சீமான் சாடல்
Democracy Money making Investing 15 crores and serving people Seeman electoral politics
சென்னையில் நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக கருத்துகளை வெளிப்படுத்தினார்.அவர் தெரிவிக்கையில் பணம் கொடுத்து வாக்குகளை பெறும் அரசியல் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றி விட்டது என கடுமையாக விமர்சித்தார்.

மேலும்," ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட ரூ.15 கோடி வரை செலவிடும் நிலை உருவாகி இருக்கிறது என்றால், அது மக்கள் சேவைக்காக அல்ல; முதலீட்டின் லாபத்தை எதிர்பார்க்கும் மனநிலைக்காகவே" என அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலை முதலீடாக பார்க்கும் அரசியல் நிலை தொடர்ந்தால், மக்கள் சேவை மறைந்து, பணம் ஆதிக்கம் செலுத்தும் “பணநாயகம்” தான் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.பணம் உள்ளவர்களே அதிகாரத்தை பிடிக்கும் சூழல் உருவானால், அது உழைக்கும் மக்களின் அரசியலாக இருக்காது; மாறாக முதலாளிகளின் ஆட்சி நிலை உருவாகும் எனவும் சீமான் தெரிவித்தார்.
நல்ல ஆட்சி என்ற வார்த்தை அரசியலில் அடிக்கடி பேசப்பட்டாலும், அது நடைமுறையில் அரிதாகவே காணப்படுகிறது என்றும் அவர் விமர்சித்தார். மக்கள் சுயமறிந்து வாக்களிக்காமல், பணத்திற்கு வாக்கு கொடுக்கும் நிலை ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கிறது என அவர் எச்சரித்தார்.
மேலும் கல்வி நிறுவனங்களில் அரசியல் பேசுவதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா கலாச்சாரம் மிகுந்த அளவில் ஊக்குவிக்கப்படுகிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
கல்லூரி விழாக்களில் அரசியல் அல்லது சமூக விழிப்புணர்வு பேச்சுகளை விட திரைப்பட நிகழ்ச்சிகளே முக்கிய இடம் பெறுகின்றன. நடிகர்கள், நடிகைகள் அழைக்கப்பட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன; சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் ஆடுவது வழக்கமாகி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் சினிமா கலாச்சாரம் மிகுந்த தாக்கம் செலுத்தி ஒரு வகை “திரை வழிபாடு” நிலை உருவாகி விட்டதாகவும் சீமான் தெரிவித்தார்.
கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் சினிமா துறை இருந்தாலும், அந்த அளவுக்கு அரசியல் மீது அதன் தாக்கம் இல்லை என்றும் அவர் விளக்கினார். தமிழகத்தில் மட்டும் திரை கவர்ச்சியின் தாக்கம் அதிகமாக இருப்பது கவலைக்குரியது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
English Summary
Democracy Money making Investing 15 crores and serving people Seeman electoral politics