தமிழகத்தை பீதியில் உறைய வைக்கும் விவகாரம்! இன்னும் மெத்தனமா! அரசின் மீது திரும்பும் கோப பார்வை!
CPM Condemns tn govt for dengue issue
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (08.10.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் பலி ஆகும் நிலையில், அதிமுக அரசு மெத்தனம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, கடலூர், கோவை, சேலம் என இந்நோய் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 தினங்களுக்கு முன்பு சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8வயது சிறுவன் ரோகித், முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி மகாலெட்சுமி ஆகிய பச்சிளங்குழந்தைகள் பலியாகினர்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நுஷ்ரத் நகரைச் சேர்ந்த மெஹ்ரீன் 8வயது சிறுமியும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அதேபோல வண்டலூர் அருகே ஓட்டேரி பிரிவைச் சேர்ந்த 14வயது மாற்றுத் திறனாளி சிறுவன் ராஜேஷ் என அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் டெங்குநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.
இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பீதியில் உள்ள நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காப்பதற்கும் பதிலாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் “ தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை” என தெரிவித்துள்ளார். இது உண்மையை மூடி மறைப்பதாகும் என சுட்டிக்காட்டுவதுடன், அரசின் இத்தகையை அணுகுமுறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
எனவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், இதுவரை டெங்குநோயால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் டெங்குநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
CPM Condemns tn govt for dengue issue