நகராட்சி துறையில் கோடிக்கணக்கில் ஊழல்.. சிக்கிய செந்தில் பாலாஜி! சிக்கப் போகும் கேஎன் நேரு! தவெக அருண்ராஜ் காட்டம்!
Corruption worth crores in the municipal sector Senthil Balaji caught KN Nehru will be caught! Arunraj is a traitor
தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் பணியிடங்களை நிரப்புவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.என். நேருவும் சிக்கப் போகிறார் என தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளரும் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரான ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் “ட்ரூ வேல்யூ ஹோம்” என்ற நிறுவனத்தில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல நகராட்சிகளில் 2,538 பணியிடங்களை நிரப்பும் பணியில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அதில் 150 பேர் வரை 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து வேலை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு அமலாக்கத்துறை காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் அருண் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு,“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழியில், தற்போதைய நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேருவும் சிக்கப் போகிறார். தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுவது கடும் அநீதியாகும்,” என குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும்,“முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ‘தகிடு தத்த மாடல்’ அரசு, இளைஞர்களின் கனவுகளோடு விளையாடுகிறது. நகராட்சி துறையில் பணியிடங்களுக்காக பெரும் லஞ்சம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்யுமா என்பதே கேள்வியாக உள்ளது. ஸ்டாலின் அரசு தன் ஊழலை மூடி மறைக்கிறதா, அல்லது தைரியமாக விசாரணைக்கு அனுமதி தருகிறதா என்பதைக் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என பதிவு செய்துள்ளார்.
அமலாக்கத்துறையின் கடிதம் வெளிவந்ததுடன், அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என். நேருவை சுற்றி சிக்கல் நெருங்கும் நிலையில், தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதில் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
English Summary
Corruption worth crores in the municipal sector Senthil Balaji caught KN Nehru will be caught! Arunraj is a traitor