அதிமுகவில் தொடரும் அதிருப்தி? உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்!
Continuing discontent in the AIADMK I want nothing to do with you all SP Velumani heads to Singapore a final message to Edappadi
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி அதிருப்தி இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான புதிய தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தலுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் மீது அதிருப்தி தெரிவித்ததாகவும், தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அவர்களிடம் இருந்த முக்கிய கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த முக்கியத் தலைவராகக் கருதப்பட்ட எஸ்.பி. வேலுமணி, கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். கொங்கு மண்டலத்தைத் தாண்டி தமிழகம் முழுவதும் தனது ஆதரவு வட்டத்தை உருவாக்கியிருந்த அவர், தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியுடனான உறவில் விரிசலை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் எடப்பாடியுடன் சமரசம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானாலும், முன்னர் வகித்த தலைமை நிலைய செயலாளர் மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிகள் மீண்டும் அவருக்கு வழங்கப்படவில்லை. அந்தப் பொறுப்புகளில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேலுமணி ஆதரவாளர்களில் சிலர் புதிய நிர்வாகத்துடன் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், குடும்பத்தினருடன் எஸ்.பி. வேலுமணி சிங்கப்பூர் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வாரங்கள் அங்கு தங்கி ஓய்வு எடுக்கவும், தனிப்பட்ட தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபடவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவல்களின்படி, சிங்கப்பூரில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வேலுமணி ஒரு முக்கியச் செய்தி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், “நான் கட்சியை விட்டு வெளியேறவில்லை; சமரசம் செய்த பிறகும் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் புதிய நிர்வாக அமைப்பை உருவாக்கி, எனக்கும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதுகுறித்து எஸ்.பி. வேலுமணி அல்லது அதிமுக தலைமையிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தற்போது வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் தொடர்ந்து நீடிக்கும் அதிருப்தி, முக்கிய நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளை எந்த திசைக்கு கொண்டு செல்லும் என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
English Summary
Continuing discontent in the AIADMK I want nothing to do with you all SP Velumani heads to Singapore a final message to Edappadi