RSS கீதத்தைப் பாடிய து.முதல்வர்! ராகுல் காந்தியை பொருட்டாகவே மதிக்கதாக காங்கிரஸ் தலைவர்கள்...? போட்டு தாக்கும் பாஜக!
Congress rahul RSS DK Shivakumar issue BJP
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று மாநில சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் கீதத்தைப் பாடிய சம்பவம் கடும் சர்ச்சையை தூண்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ்ஸை பாராட்டியதை காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்த நிலையில், சிவகுமாரின் இந்த நடவடிக்கை அரசியல் விவாதத்துக்குக் காரணமாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் 73 விநாடிகள் கொண்ட வீடியோவில், சிவகுமார் ‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே’ என்ற ஆர்எஸ்எஸ் கீதத்தை சட்டப்பேரவையில் பாடும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, பாஜக தரப்பில் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “சிவகுமார் ஆர்எஸ்எஸ் கீதம் பாடியதை பார்த்தால், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போன்றோர் அதிர்ச்சி அடைவார்கள். பிரதமர் மோடி செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்களிப்பைப் பற்றி பேசிய பிறகு, சசி தரூர் முதல் டி.கே.சிவகுமார் வரை காங்கிரஸ் தலைவர்கள் ஆர்எஸ்எஸ்ஸை பாராட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் காங்கிரஸில் யாரும் ராகுலை தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை என்பது வெளிப்படுகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.
இந்த சர்ச்சை சூடுபிடித்த நிலையில், சிவகுமார் விளக்கம் அளித்தார். “நான் பிறவிக்குமே காங்கிரஸ் உறுப்பினன். ஒரு தலைவராக எதிரிகளையும் நண்பர்களையும் அறிந்திருக்க வேண்டும் என்பதால் அவர்களைப் பற்றி படித்துள்ளேன். ஆனால் நான் பாஜகவுடன் கைகோர்ப்பது என்ற கேள்வியே இல்லை. பிறந்ததிலிருந்து வாழ்நாள் முழுவதும் காங்கிரஸுடனேயே இருப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம், காங்கிரஸ் உட்கட்சியில் உள்ள சிக்கலையும், மோதலையும் அம்பலப்படுத்த உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Congress rahul RSS DK Shivakumar issue BJP