தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதம் லோக்சபாவில் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
தேர்தல் சீர்திருத்தம் குறித்து இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதோடு,இது குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இல்லை என்ற தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தின என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விவாதத்துக்கு பாராளுமன்றம் உயர்ந்த இடம் என்பதை நான் தெளிவாக சொல்கிறேன். பாஜ - தேஜ கூட்டணி விவாதத்தில் இருந்து விலகி ஓடியதில்லை என்றும் எந்த விவகாரம் குறித்தும் பாராளுமன்ற விதிமுறைகளின்படி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று அமித்ஷா பேசியுள்ளார்.
எஸ்ஐஆர் குறித்து இந்த அவையில் விவாதிக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளதாகவும், ஏனெனில், எஸ்ஐஆர் என்பது தேர்தல் கமிஷனின் பொறுப்பு. தேர்தல் கமிஷனும், தலைமைத் தேர்தல் கமிஷனரும் அரசின் கீழ் செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், விவாதம் நடத்தி கேள்வி எழுப்பப்பட்டால், அதற்கு யார் பதில் அளிப்பார்கள்..? கடந்த நான்கு மாதங்களாக எஸ்ஐஆர் குறித்து பொய்கள் பரப்பப்பட்டன. நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டன என்றும் பாராளுமன்ற விவாதத்தில் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: ஒரு நாட்டின் பிரதமரையும், மாநில முதல்வரையும் ஊடுருவல்காரர்கள் தீர்மானித்தால் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவது தான் எஸ்ஐஆர். இது சில கட்சிகளின் அரசியல் நோக்கங்களை பாதிக்கும். அந்த கட்சிகளுக்கு எனது இரங்கலை தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இந்த நாட்டின் வாக்காளர்கள் அவர்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். ஊடுருவல்காரர்கள் தான் ஓட்டுப்போடுவார்கள். தற்போது அவர்களும் செல்ல உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த நவம்பர் 05-இல் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஹைட்ரஜன் குண்டை செயலிழக்க செய்தார். அத்துடன், ஹரியானாவில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். அதற்கு தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்திவிட்டதாகவும்,அந்த வீடோ, அல்லது வாக்காளர்களோ போலி கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலத்திற்கு ஏற்ப வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர், இதற்காகவே 2025-இல் எஸ்ஐஆர் பணியை தேர்தல் கமிஷன் தொடங்கியுளதாவவும், இறந்தவர்கள், வெளிநாட்டவர்களின் பெயரை நீக்கவே எஸ்ஐஆர் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எஸ்ஐஆர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். முதல் எஸ்ஐஆர் பணிகள் 1952-இல் நடந்தன. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேரு பிரதமராக இருந்தார். இரண்டாவது எஸ்ஐஆர் 1957-இல் நடந்தது. அப்போதும் நேரு பிரதமராக இருந்தார். மூன்றாவது முறையாக நேரு பிரதமராக இருந்த போது 1962-இல் நடந்தது.1965 -66இல் பெரியளவில் எஸ்ஐஆர் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தார் என்பதையும் பாராளுமண்ட விவாதத்தில் அமித்ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து, இந்திரா, ராஜிவ், நரசிம்மராவ் ஆகியோர் பிரதமராக இருந்த போதும், பிறகு பாஜவின் வாஜ்பாய், காங்கிரசின் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்தபோதும் எஸ்ஐஆர் நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடப்பதற்கு இது தேவைப்பட்டது. வாக்காளர் பட்டியல் மோசடியாக இருந்தால் எப்படி தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தமிழகத்தில் பாஜ தோல்வியை சந்தித்த போது, தேர்தல் சிறந்தது என்றனர். நாங்கள் வெற்ற பெற்ற போது தேர்தல் மோசடி என்கின்றனர். நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் கமிஷன் சிறந்தது. தோற்கும்போது தேர்தல் கமிஷனை குறை சொல்கிறீர்கள். இது போன்ற இரட்டை வேடம் இனிமேல் பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.

நாடு விடுதலைக்கு பிறகு, சர்தார் வல்லபாய் படேலுக்கு 28 பேரின் ஆதரவு இருந்தது. நேருவுக்கு 02 பேரின் ஆதரவு மட்டுமே இருந்தது. ஆனால், ஓட்டுத் திருட்டு மூலம் நேரு பிரதமர் ஆனார் என்று கூறியுள்ளார். இரண்டாவது ஓட்டுத்திருட்டு இந்திரா செய்தார் என்றும், அதாவது, தேர்தல் முடிவை நீதிமன்றம் ரத்து செய்த போது, தனக்கு தானே அதிகாரம் அளித்துக் கொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாவதாக ஓட்டுத்திருட்டு, நாட்டின் குடிமகனாக ஆவதற்கு முன் சோனியா எப்படி வாக்காளர் ஆனார் என்ற விவகாரம் நீதிமன்றத்தை எட்டியுள்ளது என்பதையும் விளக்கியுள்ளார்.
மேலும்,வாக்காளர் பட்டியல் புதிதோ அல்லது பழையதோ காங்கிரஸ் தோற்பது நிச்சயம். பாஜ வெற்றி பெற்றதை விட தோல்வியை சந்தித்துள்ள போதும் கூட, நாங்கள் தேர்தல் கமிஷனை கேள்வி கேட்டது இல்லை. எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனின் பிம்பத்தை கெடுத்து விட்டன. வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்றால், நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்..? என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், காங்கிரஸ் தோல்வியடைவதற்கு வாக்காளர் பட்டியலோ மின்னணு ஓட்டு இயந்திரமோ காரணம் அல்ல. உங்களின் தலைமைதான் காரணம் என்றும் காங்கிரஸ் தோற்கும் பாரம்பரியம் 2014-இல் தொடங்கியது என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அக்கட்சி 1989 -இல் ராஜிவ்காந்தி கொண்டு வந்த மின்னணு ஓட்டு இயந்திரம் மீது குறை சொல்கிறது. மின்னணு ஓட்டு இயந்திரம் முதல் முறை பயன்படுத்தப்பட்ட 2004 மற்றும் 2009-இல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இரண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், 2014 தோல்விக்கு பிறகு குறை சொல்ல ஆரம்பித்து விட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஓட்டுப்பெட்டிகளை கைப்பற்ற முடியாது. முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன என்று கூறியதோடு, பிரதமரின் சுற்று பயணத்துக்கும், தேர்தல் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் எப்போதும் மக்கள் மத்தியில் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் சுற்று பயணத்துக்கும், தேர்தல் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் எப்போதும் மக்கள் மத்தியில் இருக்கிறார். தேர்தல் சீர்திருத்தம் குறித்து 2014 முதல் காங்கிரஸ் எந்த ஆலோசனையும் வழங்கியதில்லை என்று பாராளுமன்ற விவாதத்தில் பதிலளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
English Summary
Congress defeat is due to their leadership says Amit Shah