தமிழ்நாடு தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம்; 'தேர்தல் ஆணையத்தின் நடுநிலை நடுத்தெருவில்' என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை இன்று தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

அதற்கு பதிலாக புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டு, அவர் உடனடியாக பதவியேற்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. மாற்றம் குறித்து 'தேர்தல் ஆணையத்தின் நடுநிலை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து' என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல் சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல.

நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பா.ஜ.க. பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். 

ஆனால், நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல் சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமருக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் “தலைமைச் செயலாளர்” “டிஜிபி” ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது.

ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.

எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Stalin Criticizes Changes to Tamil Nadu Chief Secretary and Vigilance DGP Posts


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->