ஓபிஎஸ் தரப்பு போட்ட வழக்கு.. தடை விதிக்க முடியாது... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!
ChennaiHC refuses to stay AIADMK GC resolutions
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் "கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொது குழுவில் ஓ.பன்னீர்செல்வம், மைதிலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் மற்றும் தன்னை கட்சியிலிருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இடைக்கால பொதுச் செயலாளராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணைய ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து நிறைவேற்ற தீர்மானத்தையும் ரத்து செய்ய வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஓபிஎஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "அதிமுக விதிப்படி கட்சி கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர கட்சியில் இருந்து நீக்க பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அதேபோன்று பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது. மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது. எனவே கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.
அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி "எதிர் தரப்பின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும். எனவே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் மார்ச் 17ஆம் தேதிக்கு பொத்திவைத்து உத்தரவிட்டு உள்ளார்.
English Summary
ChennaiHC refuses to stay AIADMK GC resolutions