ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்..!
CBI investigation begins in Armstrong murder case
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து தனது அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த 2024 ஜூலை 05-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இக்கொலை வழக்கை முதலில் விசாரித்த சென்னை செம்பியம் காவல்துறை, 30 பேர் மீது 7,411 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அடுத்து இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா ஆகிய இருவர் காவல்துறையின் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காவல் துறையின் விசாரணையில் திருப்தி அடையாத ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர், ''கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கைவிசாரித்த உயர் நீதிமன்றம், காவல் துறையின் புலனாய்வில் இருந்த பல்வேறு குளறுபடிகளைச் சுட்டிக்காட்டியதுடன், தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை ரத்து செய்து வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய திமுக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனால், சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக அரசுக்கு ஆட்சிக்கு வந்துள்ளது. அதன்பின்னர் முந்தைய திமுக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தற்போதைய அரசு அண்மையில் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால், சிபிஐ விசாரணைக்கான இடைக்கால தடை விலகியது.
இதனைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் செம்பியம் காவல் துறை, சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதன்படி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் 08 பேர் மீது, 05 பிரிவுகளின் கீழ் சிபிஐ முறைப்படி வழக்குப் பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது.
English Summary
CBI investigation begins in Armstrong murder case