காவிரி விவகாரம்: பெங்களூர் பயணம் ரத்து..உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்.. கடைசி வரை பிடிவாதம் காட்டிய விஜய்.. என்ன நடந்தது?
Cauvery Issue Bengaluru trip cancelled Intelligence report received Vijay remained adamant until the very end What happened
சென்னை: காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் பெங்களூருக்கு மேற்கொள்ள இருந்த பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கு முன்பே கர்நாடகாவில் எதிர்ப்பு போராட்டங்கள் வெடிக்கும் என தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நீர் உரிமை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல்வர் விஜய் பெங்களூருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயணம் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் முன்னதாக கருத்து தெரிவித்திருந்ததால், சந்திப்பு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியது.
ஆனால், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இந்த பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு தனது சட்டப்பூர்வ உரிமையை வலியுறுத்த வேண்டுமே தவிர, பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அவர்கள் வாதிட்டனர்.
இதற்கிடையில், முதல்வர் விஜய் பெங்களூருக்கு வரும்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டவும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் கர்நாடகாவில் சில அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக தமிழக உளவுத்துறை இரண்டு நாட்களுக்கு முன்பே அரசுக்கு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் முதல்வரின் ஆலோசகர்களிடமும் பகிரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களால் விஜய் தனது பயணத்தை ரத்து செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகாரிகள் மத்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இறுதி முடிவு எடுக்காமல் பயணத் திட்டம் தொடர்ந்து பரிசீலனையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர், கர்நாடகாவில் நிலவும் சூழ்நிலையை காரணம் காட்டி, தற்போதைக்கு பெங்களூருக்கு வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னரே விஜய்யின் பயணம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தபோதிலும், கர்நாடக அரசு அதை செயல்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் கர்நாடக தலைமைச் செயலாளரை அணுகியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், உளவுத்துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பின்னரும் கடைசி நேரம் வரை பயணத்தை ரத்து செய்யாதது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அல்லது முதல்வர் அலுவலகம் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
English Summary
Cauvery Issue Bengaluru trip cancelled Intelligence report received Vijay remained adamant until the very end What happened