நடுரோட்டில் பெண்ணைக் கொன்ற கார்...! கோயம்பேடு கொடூரத்தைக் கண்டு கொதித்தெழுந்த பிரேமலதா விஜயகாந்த்...!
car killed woman middle road Premalatha Vijayakanth outraged by Koyambedu atrocity
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 18 வயதுடைய இளம்பெண் யான்சி கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த யான்சி தனது நண்பர்களுடன் பொழுதுபோக்கு நிகழ்வில் பங்கேற்றிருந்தபோது, அங்கு இருந்த மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் வன்முறை மோதலாக மாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இளம் பெண்ணின் மீது வாகனத்தை ஏற்றி உயிரைப் பறிப்பது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல, சமூக நெறிமுறைகளையே சவாலுக்கு உள்ளாக்கும் கொடூர குற்றமாகும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.பெண்களின் பாதுகாப்பு மற்றும் உயிர் உரிமை தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் வகையில் நிகழும் சம்பவங்கள் சமுதாயத்தில் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஆணாதிக்க மனநிலையால் உருவாகும் தாக்குதல்களை எந்த சூழலிலும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பெண்ணின் உயிர் மதிப்பிட முடியாதது; அதற்கான பதிலாக நீதியே நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றைய இளைஞர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய பொறுப்பு அவர்களிடம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். சமூகத்தின் மரியாதையை குலைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடாமல், பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்தும் பொறுப்பு பெற்றோர்களுக்கும், பாதுகாப்பான மற்றும் நாகரிகமான சமூகச் சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் சம அளவில் உள்ளது.
அனைவரும் தங்களது கடமைகளை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற துயரமான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
car killed woman middle road Premalatha Vijayakanth outraged by Koyambedu atrocity