லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றத்தில் கே.என்.நேரு வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு
Bribery Case Against Former Minister Madras HC Defers Hearing and Extends Interim Stay Until July 10
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் 2,538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமன முறைகேடு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த நியமனங்களுக்காகச் சுமார் 634 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முந்தைய திமுக அரசு தரப்பில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்த போதிலும், ஜூன் 23-ஆம் தேதியான இன்று வரை அதன் மீது எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பதவியேற்றுள்ள சூழலில், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரி தற்போதைய அரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இதனைத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
இதற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆட்சி மாறினாலும் முந்தைய அரசு எடுத்த சட்டப்பூர்வ நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறாகத் தற்போதைய அரசு செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் வாதிட்டனர். மேலும், பிரதான வழக்கில் தங்களின் விளக்கத்தைக் கேட்காமலேயே வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதால், இந்த மறு ஆய்வு மனுக்களைக் கண்டிப்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, கே.என்.நேருவின் மறு ஆய்வு மனுக்கள் மற்றும் முந்தைய அரசின் மனுவை வாபஸ் பெறக் கோரும் தற்போதைய தவெக அரசின் மனு ஆகிய அனைத்தின் மீதான விசாரணையையும் ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்ற இடைக்காலத் தடையையும் நீதிபதிகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Bribery Case Against Former Minister Madras HC Defers Hearing and Extends Interim Stay Until July 10