..மாண்டது அமைச்சு! இந்த திருக்குறள் உணர்ந்து CM ஸ்டாலின் செயல்படுவாரா? பாஜக நாராயணன் கேள்வி!
BJP Narayanan Thirupathy Condemn to TNGovt DMK MK Stalin
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து 9ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேரும், 22 வயதான ஒரு நபரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவலம் அதிர்ச்சியளிக்கிறது.
அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களாக இது போன்ற கூட்டு பாலியல் கொடுமைகள், சிறுமிகள் மீதான வன்கொடுமைகள் தொடர் கதையாகி வருகிறது.
மது போதை தான் இது போன்ற குற்றநிகழ்வுகளுக்கு தூண்டுகோலாக இருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக மாணவர்களிடையே சமீப காலமாக போதை பொருள் மற்றும் மது பழக்கம் அதிகரித்து வருவது சமுதாய சீர்கேடு மட்டுமல்ல, பள்ளிகளில் மாணவர்களிடையே ஒழுக்கத்தை போதிக்க தவறிய கல்வித்துறையின் தோல்வியே என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
ஒரு காலத்தில் ஆசிரியர்கள் மீது அளவு கடந்த பக்தியும், மரியாதையும் இருந்த நிலை மாறி தற்போது மாணவர்கள் சீரழிந்து போவதற்கு காரணம் என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டியது மிக அவசியமாகிறது.
பள்ளிக் கல்வித்துறையின் செயலற்ற தன்மையா? ஆசிரியர்களின் நியமனங்களில் கோளாறா? பெற்றோர்களின் கட்டுப்பாடுகளில் தளர்வா? சமூக ஊடகங்களின் தாக்கமா? சமுதாய சீர்திருத்தத்தில் மாநில அரசின் அலட்சியமா? சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் அடையாளமா?திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலமா? அல்லது பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் காரணமா? எதுவாக இருந்தாலும் அரசின் திறமையற்ற, அலட்சிய நிர்வாகம் தான் மிக முக்கிய காரணமாக அமைகிறது.
சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு, சட்டங்களை அமல்படுத்துவது, சட்ட ஒழுங்கு என முறையாக நடந்து கொள்ளாத அரசினால் தான் சமுதாய சீர்கேடு நடைபெறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
என்ற வள்ளுவனின் குறளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து செயல்படுவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Condemn to TNGovt DMK MK Stalin