நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களுக்கு பெரிய துரோகம் செய்திருக்கிறது திமுக அரசு - அண்ணாமலை கண்டனம்!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin
பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில், சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை, கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்துள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நிதிநிலைமை காரணம் கூறி, ஆசிரியப் பெருமக்களைப் பணிநீக்கம் செய்துள்ள திமுக அரசின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 153 ல், பத்து ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிகப் பணியாற்றுபவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறியிருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்தவர்களைப் பணிநீக்கம் செய்து, பெரிய துரோகம் செய்திருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே, சுமார் 45.44% ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பது, கடந்த டிசம்பர் மாதம் வெளியான செய்திகளில் தெரியவந்தது. இந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல், காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல், தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது திமுக அரசு.
கடந்த 2024 - 2025 ஆண்டில் மட்டும், சுமார் 110 கோடி, விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது திமுக அரசு. இந்த ஆண்டு, ஊரக உள்ளாட்சித்துறைக்கு மட்டுமே, ₹500 கோடி, விளம்பரச் செலவுக்கு ஒதுக்கியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக வீண் விளம்பரங்களுக்கு மட்டுமே பல நூறு கோடி செலவு செய்து வரும் திமுக அரசுக்கு, ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யவோ, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவோ நிதி இல்லை என்றால், இந்த கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்?
உடனடியாக, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கும் பணி வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin