பின்தங்கியோருக்கு ரூ.10 லட்சம்... பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை நிதி உதவி... பாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதிகள் வெளியானது!
Bihar election 2025 NDA BJP manifesto
வரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பிகாரில் நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மக்கள் நலனுக்கான பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, என்டிஏ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இளைஞர்களுக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அதேபோல், பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.2 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது. கல்வித் துறையில், கேஜி முதல் முதுகலை வரை இலவச தரமான கல்வி வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள் நிறுவப்படவுள்ளன.
போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சிக்காக 10 புதிய தொழிற்துறை பூங்காக்கள் உருவாக்கப்படுவதுடன், 7 விரைவுச் சாலைகள் மற்றும் பிகாரின் மேலும் 4 முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, லோக் ஜனசக்தி கட்சி, மதச்சார்பற்ற ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
English Summary
Bihar election 2025 NDA BJP manifesto