வங்கதேசத்தின் புதிய பிரதமர் பதவியேற்பு விழாவிற்குப் பிரதமர் மோடிக்கு அழைப்பு!
Bangladesh Tarique Rahman to Take Oath as PM with Global Leaders in Attendance
2024-ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு, வங்கதேசத்தில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இத்தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சி (BNP) மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து, வங்கதேசத்தின் புதிய பிரதமராகத் தாரிக் ரஹ்மான் வரும் செவ்வாய்க்கிழமை மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பதவியேற்கவுள்ளார். இவ்விழாவில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, இந்தியாவுடன் சேர்த்து சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 13 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வங்கதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இந்தியப் பிரதமரை மரியாதை நிமித்தமாக நேரில் அழைப்போம்" என பி.என்.பி. கட்சியின் மூத்த தலைவர் எஹ்சானுல் ஹக் மிலன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாரிக் ரஹ்மானின் இந்த மகத்தான வெற்றிக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "ஜனநாயக முறையிலான வங்கதேசத்திற்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும்" எனத் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். அண்டை நாட்டின் இந்த அரசியல் மாற்றம் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவுடனான உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Bangladesh Tarique Rahman to Take Oath as PM with Global Leaders in Attendance