ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லையா...? - அரசு மருத்துவமனைகளின் தொடர் அலட்சியத்தை சுட்டிக்காட்டி சீமான் கடும் கண்டனம்...!
Are lives poor worthless Seeman strongly condemns continued negligence government hospitals
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் அலட்சியச் செயல்பாடுகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், “அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியமான செயல்பாடுகளை தமிழ்நாடு அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து நிகழும் மருத்துவ அலட்சியங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி வருகின்றன” என தெரிவித்துள்ளார்.மேலும், “ராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பெண், மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் இதுவரை சுயநினைவு திரும்பாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.அதோடு, “இந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்காமல் உண்மையை மறைக்க முயற்சிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பில் அக்கறையின்றி செயல்படும் மருத்துவ அமைப்புகளின் பொறுப்பற்ற அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது” என சாடியுள்ளார்.இதைத் தொடர்ந்து, “அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து அரங்கேறும் அலட்சியப்போக்குகள் மற்றும் தவறான சிகிச்சை முறைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை உருவாக்கி வருகின்றன.
மருத்துவமனைகளின் தூய்மை, நோயாளிகளின் பாதுகாப்பு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் இருப்பு உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.மேலும், “அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யாததால்தான் இதுபோன்ற துயர சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆட்சிகளில் இருந்த அலட்சிய நிலை தற்போதைய ஆட்சியிலும் நீடிப்பது மிகவும் வேதனையளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.அதோடு, “அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவ சேவையும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.
மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக மாறியுள்ளது” எனவும் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.இறுதியாக, “அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் கொடூர நிலை இனியும் தொடரக்கூடாது.
வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழ்நாடு அரசு உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Are lives poor worthless Seeman strongly condemns continued negligence government hospitals