சபாநாயகர் அப்பாவு தொகுதியில் இருந்தே கேரளாவுக்கு கற்கள் கடத்தி கொண்டு செல்லப்படுகிறது - அறப்போர் இயக்கம் அதிர்ச்சி வீடியோ!
Arappor Iyakkam Stone guvary Arapor
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இவர் தான் குவாரி முதலாளிகளின் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் அறப்போர் கூட்டத்திற்கு வன்முறை செய்ய குண்டர்களை அழைத்து வந்தவர்.
தமிழ்நாட்டில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்கள் கேரளாவுக்கு செல்வதாக மிகவும் தெளிவாக சொல்கிறார். அதுவும் சபாநாயகர் அப்பாவு அவர்களின் ராதாபுரம் தொகுதியில் இருந்து தான் அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு செல்கிறதாம்.
இதே ராதாபுரம் தொகுதியில் தான் அளவுக்கதிகமாக சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக தமிழக அரசு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு, அங்கே செயல்பட்டு வந்த கல் குவாரிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு குவாரிகளும் மூடப்பட்டது. ஆனால் அப்பாவு அவர்கள் இந்த குவாரிகளை திறக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்தார். சட்ட விரோத குவாரிகளை மீண்டும் திறக்கவும் செய்தனர்.
கேரளாவுக்கு சட்டவிரோதமாக கல் அனுப்ப தான் இவ்வளவு அவசரமாக சட்ட விரோத குவாரிகளை திறந்து விட்டீர்களா? கேரளாவுக்கு சட்டவிரோதமாக கல் அனுப்ப தான் இந்த சட்ட விரோத குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட 262 கோடியை 14 கோடியாக குறைக்க உத்தரவிட்டீர்களா? நெல்லையில் மட்டும் 53 குவாரிகளில் 1 கோடி மெட்ரிக் டன் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது. 30 மீட்டர் ஆழத்திற்கு வெட்டி எடுக்க அனுமதி வாங்கி மூன்று முதல் பத்து மடங்கு ஆழத்திற்கு வெட்டி எடுத்துள்ளதாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சட்ட விரோத குவாரிகள் தொடர்ந்து செயல்படும் நிலையில் இன்று கணக்கெடுத்தால் இதை விட பல நூறு மடங்கு அதிகமாக தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் சட்ட விரோதமாக கொள்ளை அடிக்கப்பட்டிருக்கும். இப்படி கொள்ளை அடிக்கப்படும் கற்கள் தமிழ்நாட்டின் சபாநாயகர் தொகுதியில் இருந்தே கேரளாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்படுகிறது என்பது எத்தனை அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்..!!
மக்கள் நலனை விட தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சட்ட விரோதமாக அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்க்கும் கல் குவாரிகளிடம் இருந்து வரும் நலன் தான் முக்கியம் என்று இருக்கும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நாம் கேள்வி கேட்பது அவசியம்.
இந்தத் திருட்டு கற்களைக் கடத்தும் குவாரிகளை நடத்துபவர்களையும், அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் அறப்போர் இயக்கம் கேள்வி கேட்டதாலும், மேலும் இதனால் மக்கள் படும் பாதிப்புகளை ஆவணப்படுத்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதாலும், நம்மீது இந்த சட்டவிரோத குவாரி தரப்பு கும்பல் தாக்குதலை நடத்தியது. தொடர்ந்து கேள்விகள் கேட்போம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Arappor Iyakkam Stone guvary Arapor