அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விவகாரம்: 'வழக்கம்போல இந்தப் பிரச்னையையும் மடைமாற்றிவிடலாம் என்று எண்ணினால், அது நடக்காது': திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி..?
Annamalai question to DMK government regarding law college student issue
மாநிலத்தின் தலைமைச் சட்டக் கல்லூரி விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
'சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள, அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் விடுதியில், அடிப்படை வசதிகள் கோரி பல காலமாக மாணவியர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். 152 அறைகள் இருக்கும் இந்த விடுதியில், 40 கழிப்பறைகளே உள்ளன. அறைக்கு மூன்று பேர் என, சுமார் 450க்கும் அதிகமான மாணவியர் இங்கு தங்கிப் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சேப்பாக்க வளாக மாணவியர் 115 பேரையும், பெருங்குடி வளாகத்திற்கு மாற்றியுள்ளனர். ஏற்கனவே அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மாணவியர், மேலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு, வேறுவழியின்றி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலத்தின் தலைமைச் சட்டக் கல்லூரி விடுதியில், அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், மேலும் மேலும் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? நல்ல குடிநீர், தரமான உணவு என எதுவும் வழங்கப்படுவதில்லை. சட்டம் பயிலும் மாணவியர் நிலையே இப்படி என்றால், இதர மாணவ, மாணவியர் விடுதிகளின் நிலை எத்தனை மோசமாக இருக்கும்?
அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க., அரசு சார்பில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., அரசு, வழக்கம்போல இந்தப் பிரச்னையை மடைமாற்றிவிடலாம் என்று எண்ணினால், அது நடக்காது.
அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதி மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர் விடுதிகளிலும், முறையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தரமான உணவு, நல்ல குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு முதல் படியாக, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் அமைந்திருக்கிறது. தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அனைத்து சட்டக் கல்லூரி மாணவியருக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
English Summary
Annamalai question to DMK government regarding law college student issue