"நான் வெறும் பூத் ஏஜென்ட் தான்"! மேலிட பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்! அதிர்ச்சியில் அண்ணாமலை ஆதரவாளர்கள்!
Annamalai message to the BJP Annamalai supporters in shock
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி நீடித்து வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் போன்ற தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட அண்ணாமலை விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த தொகுதிகள் அவருக்கு ஒதுக்கப்படாததால் அவர் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில், “கோவையில் தொகுதி கிடைத்தால் மட்டுமே போட்டியிடுவேன்; இல்லையெனில் கட்சி தொண்டனாக பணியாற்றுவேன்” என்று அவர் மேலிடத்திற்கு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பூத் லெவல் ஏஜென்ட்டாக (BLA) பணியாற்றுவேன் என்று அண்ணாமலை கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தேர்தல் நாளில் காலை வாக்களித்துவிட்டு, முழு நாளும் கட்சிக்காக பணி செய்வேன் என அவர் தெரிவித்தது, அவர் போட்டியிலிருந்து விலகும் முடிவை உறுதி செய்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக தேர்தலில் போட்டியிடும் தலைவர்கள் பூத் ஏஜென்ட்டாக செயல்படுவது வழக்கம் இல்லை. இந்த நிலையில் அண்ணாமலை எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, “என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்” என்ற மறைமுகச் செய்தியாக பாஜக மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பாஜக மேலிடம் அவரை வேறு தொகுதியில் போட்டியிட வைக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அண்ணாமலை அதற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது.
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அண்ணாமலை இறுதியாக என்ன முடிவு எடுக்கிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் கவனமாகக் காத்திருக்கின்றன.
English Summary
Annamalai message to the BJP Annamalai supporters in shock