தொடரும் இலங்கை கடற்படையின் அராஜகம்...! மீனவர்களின் கதி என்ன...? - மத்திய, மாநில அரசுகளுக்கு பிரேமலதா அவசர வலியுறுத்தல்...!
anarchy Sri Lankan Navy continues What fate fishermen Premalatha urgent appeal central and state governments
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் சிறையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.கடலை நம்பி வாழ்வாதாரம் தேடும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால், அவர்களின் குடும்பங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றன.
மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.எனவே, இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இனியும் தாமதிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முந்தைய ஆட்சிகளில் கடிதம் எழுதுவதோடு பணி முடிந்துவிட்டது. ஆனால், நமது அரசு அப்படி கிடையாது” என்று முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். ஆனால், தற்போது அதே நடைமுறையில் கடிதம் எழுதுவதோடு நடவடிக்கைகள் முடங்கியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பாகவே சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாக வேண்டும்.
அவ்வாறு நடந்தால் அது ஒட்டுமொத்த மீனவர் சமுதாயத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கும்.எனவே, “மீனவ நண்பன்” என்று வார்த்தைகளில் மட்டும் கூறுவதைவிட, மீனவர்களின் துயரத்தை நேரில் உணர்ந்து செயல்பாட்டின் மூலம் அதை நிரூபிக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்து, அவர்களை மீட்பது இந்த அரசின் முக்கிய கடமை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
English Summary
anarchy Sri Lankan Navy continues What fate fishermen Premalatha urgent appeal central and state governments