ஜனவரி 05 -இல் பொங்கல் விழாவில் பங்கேற்க புதுக்கோட்டை வரும் அமித் ஷா..!
Amit Shah will be visiting Trichy on January 5th to participate in the Pongal festival
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 05-இல் நடைபெறும் பொங்கல் விழாவில், பங்கேற்பதற்காக தமிழகம் வரவுள்ளதாக தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
தலை குனிந்துள்ள தமிழகத்தை தலை நிமிர்த்த வேண்டும் என்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், இரு மாதங்களுக்கு முன் பிரசார பயணத்தை துவங்கி, தமிழகம் முழுவதும் 52 மாவட்டங்களில் பயணத்தை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இதன் நிறைவு நிகழ்ச்சி, வரும் 04-இல் புதுக்கோட்டையில் நடக்கவுள்ளது. அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மறுநாள் காலை ஜனவரி 05-ஆம் தேதி, திருச்சி, மன்னார்புரம் ராணுவ மைதானத்தில், தமிழகத்தின் கலாசாரமாக இருக்கும் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதில், 2,000 பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அன்றைய தினம், தமிழக பா.ஜ.,வின் உயர்மட்டக் குழு மற்றும் மையக் குழுவைச் சேர்ந்தோரை சந்திக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அதில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்த ஆலோசனைகளை அமித் ஷா குழுவினருக்கு வழங்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில், கூட்டணி கட்சித் தலைவரான பழனிசாமி பங்கேற்க வாய்ப்பில்லை என்றும், அவர் அன்றைய தினம், சேலத்தில் பிரசார பயணம் மேற்கொள்கிறார் என்று கூறியுள்ளார். பழனிசாமியின் பிரசார சுற்றுப்பயணம் நிறைவடைந்ததும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று முருகானந்தம் கூறியுள்ளார்.
English Summary
Amit Shah will be visiting Trichy on January 5th to participate in the Pongal festival