அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்! என்னை அழைத்து பிளான் போட்டு குடுத்தது பாஜகதான் – உண்மையை உடைத்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!
AIADMK should be unified It was BJP that called me and planned to screw me former minister Sengottaiyan broke the truth
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.
செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், சத்தியபாமா உட்பட 12 பேரை கட்சியில் இருந்து நீக்கியதையடுத்து, அவர் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது —“என்னுடன் யார் பேசினாலும் உடனே அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இப்படியே நீக்கிக் கொண்டிருந்தால் கட்சி தேய்ந்து அமாவாசையாகிவிடும்.அரவணைத்து செல்லும் மனப்பான்மை அதிமுகவில் இல்லை,” என்று கடுமையாகக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தார் —“எடப்பாடி பழனிசாமியால்தான் நான் அமைச்சரானேன் என்கிறார்கள். ஆனால் உண்மையில் என்னை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக முடியாது.எல்லாவற்றிற்கும் சிபிஐ விசாரணை கேட்கும் அதிமுக, கொடநாடு கொலை வழக்கில் மட்டும் சிபிஐ விசாரணை கேட்காதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
செங்கோட்டையன் மேலும் கூறினார் —“ஜெயலலிதா முதல்வராக்கியது ஓ. பன்னீர் செல்வத்தையே.ஆனால் எடப்பாடி பழனிசாமி கொல்லப்புறமாக முதல்வரானவர் என்பதை நாடு அறிந்ததே.அன்றைய நிலையும் இன்றைய நிலையும் மாறிவிட்டது. அவர் பேசும் விதமே வேதனை அளிக்கிறது,” என தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தார் —“டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களையும் சேர்த்து 122 எம்எல்ஏக்கள் முன்மொழிந்ததால்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராகினார்.ஆனால் பின்னர் அந்த 18 பேரையும் கட்சியிலிருந்து நீக்கி, எம்எல்ஏ பதவியையும் பறித்தார்.
அதேபோல், தர்மயுத்தம் நடத்தி வந்த ஓ.பி.எஸ்-யை அழைத்து, ‘நீங்கள் ஒருங்கிணைப்பாளர், நான் இணை ஒருங்கிணைப்பாளர்’ என்று கூறி, பின்னர் அவரையும் நீக்கிவிட்டார்.”
அதிமுக ஒன்றிணைவு குறித்து மேலும் பேசிய அவர் —“அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என என்னை அழைத்தது பாஜகதான்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்வதற்கே எதிராக இருந்தார்.2026, 2029, 2031 தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி இருக்காது என அவர் அறிவித்திருந்தார்.நானும் உட்பட ஆறு பேர் கூட்டணியைத் தொடர வேண்டுமென கூறினோம்; ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை,” என்று தெரிவித்தார்.
அவர் தனது தொகுதி பணிகளைப் பற்றியும் விளக்கமளித்தார்.“என் தொகுதியில் நான் பல்வேறு வளர்ச்சி பணிகளைச் செய்தேன்.
பல அமைப்புகள் என்னை பாராட்டின.ஒருமுறை எடப்பாடி பழனிசாமியின் மாமா இறுதி சடங்கிற்காக வந்தபோது, ஈரோட்டில் சாலைகள் எல்லாம் பளபளக்குது! என் தொகுதியில் கூட இப்படி இல்லை என்று என்னை நேரடியாகப் பாராட்டியிருந்தார்,” என தெரிவித்தார்.
அவர் கடுமையாகச் சேர்த்தார் —“முன்னேற வேண்டும் என்றால் சொந்த காலில் நடக்க வேண்டும்; மற்றவர்களின் முதுகில் பயணிக்கக் கூடாது,” என்று எடப்பாடி பழனிசாமியை குறித்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதிலிருந்து செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.அவர் கடந்த சில மாதங்களாக எடப்பாடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
சமீபத்தில் அதிமுக ஒன்றிணைவு குறித்து கருத்து தெரிவித்ததற்குப் பிறகு, அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
பின்னர், தேவர் ஜெயந்தி விழாவில் ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரைச் சந்தித்ததையடுத்து, செங்கோட்டையன் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.
அதிமுக விதிமுறைகளின் படி நீக்கப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு தன்னை நீக்க அதிகாரமே இல்லை என்றும், சட்ட ரீதியாகப் போராடுவேன் என்றும் செங்கோட்டையன் முன்பு தெரிவித்திருந்தார்.
இதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது —“செங்கோட்டையன் கடந்த ஆறு மாதங்களாக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.திமுகவின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார்.சட்டமன்றத்தில் இதுவரை திமுகவை எதிர்த்து ஒரு கேள்விக்கூட கேட்டதில்லை,” எனக் கூறினார்.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடியாகவே செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல்கள் தலைதூக்கி நிற்கும் நிலையில், செங்கோட்டையனின் இந்த வெளிப்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளன.அதிமுக – பாஜக கூட்டணி எதிர்காலம், மற்றும் கட்சியின் உள் ஒற்றுமை குறித்து அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன.
English Summary
AIADMK should be unified It was BJP that called me and planned to screw me former minister Sengottaiyan broke the truth