இபிஎஸ் குறித்து கேள்வி - ஓபிஎஸ் அளித்த பரபரப்பு பேட்டி!
AIADMK OPS press meet about assembly 2022
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. சில முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கான இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற பேரவை விதி 6-ன் படி சபாநாயகருக்கு உள்ள உரிமையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஐயப்பன் ஆகியோருக்கான இருக்கைகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இருக்கைகளில் மாற்றம் செய்யாதது, எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமிக்காதது உள்ளிட்ட காரணங்களால் சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்வில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக பங்கேற்கவில்லை.
அதே சமயத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் மட்டும் பங்கேற்றுள்ளார்.
அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சபாநாயகர் முடிவை அறிந்த பின் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதா இல்லை புறக்கணிப்பதா என்பது குறித்து இபிஎஸ் தலைமையிலான அதிமுக முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தெரிவிக்கையில், "நாங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம். அதிமுக விதிகளை கட்டுக்காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
எங்களுக்கு தொண்டர்க்ளின் ஆதரவு இருக்கிறது. அதிமுக சட்ட விதியை மாற்றுவது என்பது அபாயகரமானது. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறானது" என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஓபிஎஸ் இடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்க்கு ஓபிஎஸ், "எடப்பாடி பழனிசாமி பற்றிய கேள்வியை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.
English Summary
AIADMK OPS press meet about assembly 2022