அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்; உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் விளக்கமளித்து மனுதாக்கல்..!
AIADMK MLAs resignation accepted Speaker files petition in High Court
அதிமுகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைந்தனர். கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 06 பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த 06 எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்தின்படியே பதவிகளை ராஜினாமா செய்தார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பிறகே அவர்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் தரப்பில் விளக்கமளித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ. சுய விருப்பத்தின்படி ராஜினாமா செய்தார்களா என சபாநாயகர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும், சபாநாயகர் வழக்கை எதிர்கொள்ளவில்லை எனவும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் விளக்கமளித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''இந்த வழக்கில் சட்டமன்ற செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவே போதுமானது என்பதால், தனியாக பதில் மனு தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தின் மீது அதிகபட்ச மரியாதை வைத்திருக்கிறேன். சட்டமன்ற செயலாளர் மூலமாக பதில் மனு தாக்கல் செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். சுய விருப்பத்தின்படி தான் ராஜினாமா செய்கிறார்களா என ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பிறகே அவற்றை ஏற்றுக் கொண்டேன்.'' என சபாநாயகர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானதுதான். எந்த சட்டவிரோதமும் இல்லை என்பதால், மனுவை ஏற்று தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும், அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சபாநாயகரின் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சபாநாயகர் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்புக்கு அனுமதியளித்து, விசாரணையை வரும் செப்டம்பர் 1ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
English Summary
AIADMK MLAs resignation accepted Speaker files petition in High Court