அதிமுக–பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு ஜனவரி 23ல் இறுதி – பிரதமர் மோடி முன்னிலையில் அறிவிப்பு!பியூஷ் கோயல் சொன்ன அப்டேட்!
AIADMK BJP alliance seat sharing to be finalised on January 23 Announcement in the presence of Prime Minister Modi Update from Piyush Goyal
தமிழ்நாட்டில் அதிமுக–பாஜக கூட்டணிக்கான தொகுதி பங்கீடு ஜனவரி 23ஆம் தேதி இறுதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னை அருகே நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக–பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. பாமகவுக்கான தொகுதி பங்கீடு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், பாஜகவுக்கான தொகுதிகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக தரப்பில் 56 தொகுதிகள் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்றால் 3 அமைச்சரவை பதவிகள் வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கோரியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்றும், தொகுதி பங்கீடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு முடிவு தெரிவிப்பதாக கூறியிருந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் இடையே நடந்த சந்திப்பில் தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக உள்ள பியூஷ் கோயல், ஜனவரி 23ஆம் தேதி சென்னை அருகே என்டிஏ சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழகத்தில் என்டிஏவில் இடம்பெற்றுள்ள அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ளனர். அந்த பொதுக்கூட்டத்திலேயே, எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமமுகவை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல், புதிதாக இணைய விரும்பும் கட்சிகளையும் என்டிஏ வரவேற்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதால், இந்த பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
English Summary
AIADMK BJP alliance seat sharing to be finalised on January 23 Announcement in the presence of Prime Minister Modi Update from Piyush Goyal