மதுரையில் அதிமுக பிரமுகர் தலை துண்டித்து வெட்டிக்கொலை: போதை கும்பலின் வெறிச்செயல்!
ADMK Functionary Hacked to Death in Madurai
மதுரை திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார் (36), இன்று அதிகாலை மர்மக் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்தது எப்படி?
சாமநத்தம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரான செந்தில்குமார், அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே டீக்கடை நடத்தி வந்தார்.
இன்று அதிகாலை கடையைத் திறக்கச் சென்ற அவரை, வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
திடீரென அக்கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரைச் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கொலைக்கான பின்னணி:
சிலைமான் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒரு முக்கியத் தகவல் கிடைத்துள்ளது: செந்தில்குமாரின் டீக்கடை அருகே இரவு நேரங்களில் ஒரு கும்பல் மது அருந்திவிட்டு, அவ்வழியே செல்வபவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளது. இதனைச் செந்தில்குமார் கண்டித்ததோடு, "இங்கு மது அருந்தக்கூடாது" என எச்சரித்துள்ளார். இந்த முன்விரோதத்தால் ஆத்திரமடைந்த அந்தப் போதை கும்பல், திட்டமிட்டு இக்கொலையைச் செய்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அரசியல் பின்னணி:
கொல்லப்பட்ட செந்தில்குமார், திருப்பரங்குன்றம் அதிமுக ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகனிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்தவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது கொலையாளிகளைப் பிடிக்கப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
ADMK Functionary Hacked to Death in Madurai