ஆடு, கோழி வெட்டப்படுவது போல், மனிதர்கள் வெட்டி படுகொலை! விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு வெட்கக்கேடு - எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
ADMK EPS
திமுக ஆட்சிக்கு வந்தபின் கொலையாளிகள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் எல்லாம் லைசென்ஸ் பெற்றதுபோல் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்று, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "அசைவ பிரியர்களுக்காக ஆடு, கோழி வெட்டப்படுவது போல், மனிதர்கள் வெட்டி படுகொலை செய்யப்படுவது விடியா திமுக-வின் காட்டாட்சியில் நாள்தோறும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.
நேற்று (18-11-2022) காலை, சென்னை எழும்பூர் காவல்நிலைய வாசலிலேயே, விக்கி என்ற விக்னேஷ் என்ற வாலிபர் மர்ம நபர்களால் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சி.சி.டி.வி கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று செய்திகள் வருகின்றன.
சாலையில் செல்லும் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது வெட்கக் கேடானதாகும்.
திமுக ஆட்சிக்கு வந்தபின் போதைப் பொருட்கள் விற்பவர்கள். சமூக விரோதிகள், தீவிரவாதிகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் எல்லாம் லைசென்ஸ் பெற்றதுபோல் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நேற்றுக் காலையில் அரங்கேறிய வாலிபர் படுகொலை மூலம் நிரூபணமாகியுள்ளது" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.