'ஆ.ராசாவின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது'...! - தி.மு.க.வை கடுமையாக விமர்சித்த தொல்.திருமாவளவன்...
a rasa speech shocking Thirumavalavan strongly criticized DMK
தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேவேளை, இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது, த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன் தெரிவித்ததாவது,"அரசியலில் மனித மாண்பையும், நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் காணொலி மூலம் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், தி.மு.க. நடத்திய போராட்டத்தில் அந்த அறிவுறுத்தலுக்கு ஏற்ப அரசியல் மாண்பு கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துகளை த.வெ.க.வுக்கு எதிரான விமர்சனமாக மட்டும் பார்க்க முடியாது. மாறாக, அவை தி.மு.க.வுக்கே சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளாக அமைந்துள்ளன.நீண்டகால அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட தலைவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய நிலையில் இருப்பவர்கள், அரசியல் நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
ஆனால், ஆ.ராசா உள்ளிட்ட தி.மு.க.வின் முக்கியப் பொறுப்பாளர்கள் பேசிய விதம் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.இடதுசாரி கட்சிகள் த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. தற்போதும் அந்த நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இடதுசாரிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அவர்களது அரசியல் முடிவு மற்றும் சுதந்திரம். அதனை த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ கருத முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் தனக்கான அரசியல் உரிமையும் சுதந்திரமும் உள்ளது.
எனவே, இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால், த.வெ.க. தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
English Summary
a rasa speech shocking Thirumavalavan strongly criticized DMK