210 இடங்கள் நிச்சயம்… தி.மு.க. வீழ்ச்சி உறுதி! துப்பாக்கிபோல் ஒரே அணி! -ராஜேந்திரபாலாஜி சவால்
210 seats certain DMK downfall guaranteed united front rifle Rajendra Balaji challenge
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாவடி தோப்பு பகுதியில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, தேர்தல் களத்தை சூடேற்றும் வகையில் தீவிர அரசியல் உரைகளை நிகழ்த்தினார்.அவர் பேசுகையில்,“எம்.ஜி.ஆர். ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சிலர் கனவு காண்கிறார்கள்.

ஆனால் அந்த ஆட்சியை உருவாக்கவும், மீட்டெடுக்கவும் முடியும் என்றால் அது எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா உண்மை தொண்டர்களால் மட்டுமே. அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் சிதற மாட்டார்கள்; ஒரே அணியாகக் களமிறங்குவார்கள்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என அவர் கணித்தார். “மக்கள் தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது. மே 5-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்பார். அதுவே இந்தத் தேர்தலின் இறுதி முடிவு” என்று உற்சாகமாக கூறினார்.அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர்,
“ஆட்சி பொறுப்பேற்றதும் முதலில் கையெழுத்தாகும் திட்டம் – அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் ரூ.2,000 செலுத்தும் திட்டம்.
கருப்பு அட்டை, சிவப்பு அட்டை, சீனி அட்டை என எந்த பாகுபாடும் இல்லை. ரேஷன் அட்டை இருந்தால் போதும் – பணம் நிச்சயம்” என்றார்.தி.மு.க. அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், “அது முழுக்க முழுக்க ஏமாற்று நாடகம்.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி பல திட்டங்களை செயல்படுத்தாமல், வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது” என கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் பேசுகையில்,“டெல்லியில் நமக்கு வலுவான கூட்டணி இருப்பதால், அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற முடியும். மத்திய அரசுடன் சண்டை போடாமல், பேசிக் கேட்டுப் பெறத் தெரிந்த ஆட்சி தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும்.டெல்லியில் மோடி ஆட்சி – தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி… இதுதான் தமிழகத்திற்கு பொற்காலம்” என்று கூறினார்.
தி.மு.க. அரசு பெண்களுக்கு மட்டும் இலவச பஸ் பயணம் அறிவித்து குடும்பங்களைப் பிரித்துவிட்டதாக குற்றம் சாட்டிய அவர்,“கணவன் தனியாக, மனைவி தனியாகப் பயணிக்க வேண்டிய நிலை.
அந்தப் பிரிந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றாகச் சேர்க்க, ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இனிமேல் கணவன் – மனைவி, காதலர்கள் அனைவரும் அரசு பஸ்களில் இலவசமாக சினிமாவுக்கும், ஊர் சுற்றவும் செல்லலாம்” என்று கலகலப்பாக பேசினார்.திருத்தங்கல் ரெயில்வே மேம்பால விவகாரத்தையும் சுட்டிக்காட்டிய அவர்,“பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு, இப்போது மாநில அமைச்சர் மீண்டும் அடிக்கல் நாட்டுகிறார்.
இது கண் மூடித் தனமான அரசியல்” என விமர்சித்தார்.தொடர்ந்து அவர்,“வரும் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். 23-ந்தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் மோடி முன்னிலையில் அ.தி.மு.க.–பா.ஜனதா தலைவர்கள் ஒரே மேடையில் நிற்பார்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிட்டன. அனைவரும் அ.தி.மு.க. அணிக்குள் வந்து சேர்வார்கள்.ஒரு வாக்கும் பிரியாது… எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொண்டர்கள் துப்பாக்கிபோல் ஒரே அணியில் நிற்போம்.
தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்றி, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கும் வரை அ.தி.மு.க. ஓயாது!” என்று உரையை நிறைவு செய்தார்.
English Summary
210 seats certain DMK downfall guaranteed united front rifle Rajendra Balaji challenge