Freedom Fighters : சிந்தனை சிற்பி, தமிழகத்தின் தலைசிறந்த விடுதலை போராட்ட வீரர்...யார் இவர்?!
Freedom fighter singaravelar history
சிந்தனைச் சிற்பி:
சிந்தனையில் மட்டுமல்ல தன் வாழ்நாளில் ஒரு சிறந்த பொதுவுடைமைவாதியாக வாழ்ந்தவர். தமிழகத்தின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். தென் இந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதியாக அறியப்படுகிறவரை பற்றிய சிறிய தொகுப்பு...!!
பிறப்பு :
சிங்காரவேலர் 1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி பிறந்தார்.
கல்வி :
தன் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு சிறுவயது முதலே மனம் வருந்தினார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1907ஆம் ஆண்டு வழக்கறிஞராகத் தன் தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை அறிந்திருந்தார். வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
விடுதலை போராட்டத்தில் சிங்காரவேலரின் பங்கு :
சிங்காரவேலர், மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீதிமன்றத்தில் எதிராளியால் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்த வழக்கை வென்றுவிட்டு வெளியே வந்து, தன் கருப்பு அங்கியைக் களைந்து இனி நீதிமன்றத்துக்கு வரப்போவதில்லை என்றும், என் மக்களுக்காகவே பாடுபடுவேன் என்றும் கூறினார்.
காந்தியடிகளைத் தன் தலைவராக ஏற்றார். தேச விடுதலைப் போராட்டங்களில், சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஊர் ஊராகச் சென்று கல்வியறிவு இல்லாத தன் மக்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். சிறந்த பேச்சாளருமான இவர் மக்களிடையே உரையாற்றி தேசிய விழிப்புணர்வையும் ஊட்டினார்.
சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் ரௌலட் சட்டத்தினை எதிர்த்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார்.
1918ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். 'லேபர் கிஸான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான்" என்ற கட்சியை 1923ஆம் ஆண்டு தொடங்கினார்.
'லேபர் கிசான் கெஜட்" என்ற ஆங்கில வார இதழையும், 'தொழிலாளன்" என்ற தமிழ் வார இதழையும் நடத்தினார். தொழிலாளர் போராட்டங்கள், தென்னிந்திய ரயில்வே போராட்டங்களில் மும்முரமாகப் பங்கேற்றதுடன் தனது பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதியும் பிரச்சாரங்களில் ஈடுபட்டும் வந்தார்.
1928ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தண்டனை குறைக்கப்பட்டு 1930ஆம் ஆண்டு விடுதலையானார். சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார்.
சிங்காரவேலரின் மறைவு :
தேசபக்தரும், 'சிந்தனைச் சிற்பி" என்று போற்றப்பட்டவரும், தொழிற்சங்கவாதியும் மீனவர் வாழ்வில் விடிவெள்ளியாகத் திகழ்ந்து அவர்கள் வாழ்வை வளம்பெறச் செய்தவருமான ம.சிங்காரவேலர் 86வது வயதில் மறைந்தார்.
English Summary
Freedom fighter singaravelar history