கோடை கால ஆரோக்கிய ரகசியம்: எலுமிச்சை முதல் மோர் வரை...! - ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வீட்டு வைத்தியங்களின் பட்டியல்!
summer time special home remedie drinks for heat control
ஆண்டுதோறும் தாள முடியாத வெப்பத்துடன் நம்மை அச்சுறுத்த வரும் கோடைக்காலம், மீண்டும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் தயாராகிவிட்டது. வெயிலின் தாக்கத்தால் உடல் வாடி, நீர்ச்சத்து வற்றிப் போவது இயல்பு. இதற்காக விலை உயர்ந்த குளிர்பானங்களைத் தேடி ஓடாமல், நம் வீட்டு சமையலறையில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டே உடலை ஒரு 'ஏசி' அறை போல குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். குறைந்த செலவில் நிறைந்த நன்மைகளை அள்ளித்தரும் அந்த அற்புத பானங்கள் இதோ:
1. எலுமிச்சை நீர்: இளமையின் ஊற்று
வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகுவது ஒரு சிறந்த தொடக்கம். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து வயிற்று உப்பிசத்தை நீக்குகின்றன. கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தில் முதுமைத் தழும்புகள் வராமல் காக்கும் 'யங் லுக்' ரகசியம் இதுவே!

2. சீரக நீர்: வயிறு காக்கும் தோழன்
இரவு முழுவதும் ஊறவைத்த சீரகத்தை அடுத்த நாள் கொதிக்க வைத்துப் பருகுவது, உடலில் தேங்கியுள்ள தேவையற்ற வாயுவை வெளியேற்றும். இது இன்சுலின் சுரப்பைச் சீராக்கி ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதுடன், ரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்தையும் வாரி வழங்குகிறது. குறிப்பாகப் பிரசவித்த தாய்மார்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம்.
3. கொத்தமல்லி நீர்: சிறுநீரகத்தின் காவலன்
தனியா விதைகளை ஊறவைத்துக் கொதிக்க வைத்த நீர், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டி நச்சுக்களை நீக்குகிறது. சருமத் தடிப்புகள் மற்றும் பருக்களை விரட்டும் ஆற்றல் இதற்கு உண்டு. இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, கே ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துகின்றன.
4. வெந்தய நீர்: குளிர்ச்சியின் பிறப்பிடம்
வெந்தயம் ஊறவைத்த நீர், உடல் சூட்டைத் தணிப்பதில் முதன்மையானது. மலச்சிக்கலை விரட்டி, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. ஹார்மோன் சமநிலையின்மையால் அவதிப்படும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை மருந்து. (மருத்துவர் ஆலோசனை அவசியம்).
5. கருவேப்பிலை சாறு: கூந்தல் மற்றும் கல்லீரல் பலம்
கருவேப்பிலையை வெறும் மணமூட்டியாக மட்டும் பார்க்காமல், 20 மி.லி. அளவில் அதன் சாற்றைப் பருகுவது அபரிமிதமான பலன்களைத் தரும். முடி வேர்களை வலுவாக்கி இளநரையைத் தடுப்பதுடன், பித்தத்தைச் சீராக்கி கல்லீரலைப் பாதுகாக்கிறது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை மளமளவென உயர்த்தும் வல்லமை கொண்டது.
6. புதினா சாறு: மன அழுத்தத்தைத் தீர்க்கும் மணம்
புதினாவில் உள்ள மெந்தால், சுவாசப் பாதையைச் சீராக்கி மூக்கடைப்பை நீக்குகிறது. இதன் நறுமணம் தலைவலி மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும். அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்களுக்குப் புதினா சாறு ஒரு சிறந்த நிவாரணி.
7. மோர்: குடல் நலனின் 'புரோபயாடிக்' அரசன்
பாரம்பரிய முறையில் வெண்ணெய் நீக்கப்பட்ட மோர், தயிரை விடவும் மேன்மையானது. இதிலுள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளை உறுதிப்படுத்துகின்றன. இஞ்சி, சீரகம், கருவேப்பிலை சேர்த்துப் பகல் நேரத்தில் மோர் பருகுவது, கோடைக்கால நீர் இழப்பைத் தடுத்து உடலுக்குப் புத்துயிர் அளிக்கும்.
English Summary
summer time special home remedie drinks for heat control