இணையங்களின் ஆதிக்கம் நல்லவிதமாக நம்மிடையே அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதனை உபயோகம் செய்யும் நபரை பொறுத்து அது ஆபத்தானதாகவும் மாறுகிறது. ஏனெனில் இன்றுள்ள காலங்களில் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மக்கள் இருக்கும் இடத்தில் பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டாலும், சில நேரங்களில் விபரீதமான பிரச்சனைகளில் சிக்கும் அபாயமும் இருந்து வருகிறது.
இன்றுள்ள இளைஞர்களிடையே மேலைநாடுகளின் கலாச்சாரம் என்ற பெயரில், பல்வேறு மாற்றங்கள் உருவாகி வருகிறது. இது, மேலை நாடுகளில் கூட இல்லாத கலாச்சாரமும், அங்கு அப்படித்தான் என்று நம்பும் அளவு பொய்யான அல்லது அறியாத விபரத்தை கூறும் நபர் ஆணித்தரமாக பதிவு செய்யும் போது முழு தகவலும் மற்றொரு கோணத்தில் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
பதின்ம வயதில் காதல், எதிர்பாலின ஈர்ப்பு, எதிர்பாலினம் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ள ஆர்வப்படுத்தல் என்பது இயல்பானதாக இருந்தாலும், சில அறியாமை நபர்கள் மற்றும் அலட்சிய நபர்கள் காரணமாக பல்வேறு நிகழ்கால பிரச்சனை மற்றும் எதிர்கால பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர்.
இன்றுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இடையே வெகுவாக பரவிவரும் கலாச்சாரமாக டேட்டிங் என்பது இருந்து வருகிறது. இதில், சிலர் டேட்டிங் செயலி மூலமாகவும் பெண்களை சந்திக்க ஆர்வமாகவும், அவர்களுடன் பேச ஆர்வமாகவும் இருந்து வருகின்றனர். இவ்வாறான டேட்டிங் செயலியில் அறிமுகம் செய்துகொள்ளும் நபர் (ஆண்/பெண்), எதிரில் பேசும் நபர் குறித்த உண்மையை தெரியாமல் பல்வேறு பிரச்சனைகளில் சிக்குகின்றனர்.சில சம்பவத்துடன் இணைத்து நாம் பேசினால் உங்களுக்கு தெளிவாக புரியும்..
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மும்பையை சார்ந்த பெண்மணி டேட்டிங் செயலி மூலமாக அறிமுகமான நண்பரை நம்பி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். டேட்டிங் செயலியில் அறிமுகமாகி வாட்ஸப்பில் வீடியோ கால் பேசி, நிர்வாண புகைப்படங்களை பெண் பகிர்ந்து கொண்டு, அவரின் வாழ்க்கை கேள்விக்குறியானது. இவ்வாறாக பல எண்ணிலடங்கா குற்றங்களை தொடர்ந்து கூறிக்கொண்டே செல்லலாம்.
பெண்கள் தான் இந்த பிரச்சனையில் சிக்குகிறார்கள்? என்று எண்ணிலால் அது உண்மை கிடையாது. ஆண்களும் இது போன்ற பிரச்சனைகளில் சிக்குகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெங்களூரை சார்ந்த ஐடி ஊழியர், டேட்டிங் செயலியில் அறிமுகமான பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் பணம் அனுப்பி உடலை நிர்வாணமாக காண்பிக்க சொல்லி, காம ஆசையில் தானும் ஆடையை களைந்து ரூ.16 இலட்சம் வரை இழந்துள்ளார். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறாக பல விஷயங்களும் நடந்துள்ளது.
மேற்கூறிய இரண்டு தகவலும் எடுத்துக்காட்டிற்கு கூறப்பட்டவை. இந்த விவகாரத்தில் காவல் நிலையம் வரை செல்லும் வழக்குகள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி.. அது சில தகவலே.. வெளியே வராத பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறுக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் அனைவருக்கும் சந்தேகம் எழலாம்... அவளும் தவறு செய்திருக்கிறாள் / அவனும் தவறு செய்திருக்கிறான் என்று தோணலாம். ஆனால், டேட்டிங் செயலி மூலமாக நடைபெறும் குற்றங்களில் பெரும்பாலானவை மர்ம கும்பலால் திட்டமிட்டே நடத்தப்படும் செயல்கள் என்பது தான் நிதர்சனம். அவர்களுக்கு ஆண்கள்/பெண்கள் என்ற பேதம் கிடையாது. அந்த கும்பலில் பெண்கள்/ஆண்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஈவு, இரக்கம், மனிதாபிமானம் போன்று எதுவும் கிடையாது. அவர்களுக்கு தேவை பணம் / காம இச்சை தீர்க்கும் வாய்ப்பு.
சிந்தித்து பாருங்கள்... காம இச்சை மற்றும் பணத்தின் மீது போதை கொண்ட ஒருவரிடம் நீங்கள் எதை கூறினால்? உங்களை விடுவார்?.. உங்களின் வார்த்தைகள் அவர்களின் செவியில் கூட ஏறாது. சரி விசயத்திற்கு செல்லலாம். இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று வெளிநாட்டு டேட்டிங் செயலிகள் போன்று பல்வேறு செயலிகள் நீக்கப்பட்டாலும், இந்திய தயாரிப்பு என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலிகள் இன்னும் கேடானவை.
இந்த செயலிகளில் சிலவகை செயலியில் பணம் செலுத்தி சேட்டிங் செய்யும் வசதியும், சில செயலிகளில் நேரடியாக வீடியோ கால் பேசும் வசதியும் இருக்கும். சுருக்கமாக சொன்னால் உள்ளூர் தயாரிப்பில் கிடைக்கும் பொருட்களுக்கு உள்ள வித்தியாசமும், வெளிநாட்டு தயாரிப்பு பொருட்களுக்கு உள்ள வித்தியாசத்தையும் எடுத்து கூறலாம். இந்த செயலியை நாம் பதிவிறக்கம் செய்து, நமது தகவலை நிரப்பினால் நமது அலைபேசியின் விபரம் அந்த செயலி நிறுவனத்திற்கு சென்றுவிடும்.
பின்னர் நாம் அதில் உள்ள பெண்களுக்கு அழைப்பு விடுத்து பேசும் போது, எதிர்முனையில் பேசும் பெண்ணோ அல்லது ஆணோ உடல் பாகங்களை காண்பிப்பது போல இருக்கும். சிலர் ஆர்வ மிகுதியில் ஆடைகளை களைந்தால் அப்போது உங்களை பிரச்சனை தொற்றிக்கொள்ளும். எதிர்முனையில் உங்களிடம் பேசும் நபர் வீடியோ அல்லது புகைப்படத்தை பதிவு செய்து கொண்டு பகிரங்க மிரட்டலாக பணம் அல்லது காம இச்சையை தீர்க்கும் வாய்ப்பை கேட்கலாம். அவர்களிடம் பணம் கொடுக்க ஆரம்பித்தால், ஆயிரம், இலட்சம் என சென்று கொண்டு இருக்கும்.
இன்னும் சில செயலிகளில் நீங்கள் முன்புற கேமிராவை தானே நாம் காண்பித்து வருகிறோம். நமது முகம் தெரியவா போகிறது? என்று அலட்சியத்துடன் இருந்தால், அங்குதான் உங்களுக்கான பிரச்சனை தெரியவரும். இதுபோன்ற செயலிகளை கையாளும் நபர்கள் ஒரே நேரத்தில் நமது இரண்டு கேமராவையும் கண்காணிப்பார்கள். நமது முகம், உடல் என்று தெரியும் பாகங்கள் தானகவே வீடியோ அல்லது புகைப்படமாக பதிவு செய்யப்படும். இதன்பின்னர் மிரட்டல் தான்.
இது போன்ற செயலியில் அதிர்ச்சி தரும் விஷயமாக, டேட்டிங் செயலியை பெரும்பான்மையாக உபயோகம் செய்யும் நபர்கள் பிற மாநிலத்தவராக இருப்பார்கள். இதனை உபயோகம் செய்தவர்களுக்கு அது தெரியும். அதிலும், அவர்களின் இருப்பிடம் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களை காண்பிக்கும். டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் விபச்சாரம் அதிகளவு நடப்பது நமக்கு நன்றாக தெரியும்.
டேட்டிங் செயலியை உருவாக்கும் கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படும் அல்லது ஈடுபடும் பெண்களுடன் கைகோர்த்து, அவர்களை நடிக்க வைத்தும் உங்களிடம் பணம் வசூல் செய்யலாம். சில செயல்களில் உள்ள விடியோக்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால், அது நமக்கு தெரியாது. எதிர்முனையில் இருப்பவர்களுக்கு தொடர்பு கொண்டு பேசுவது போல செயலியில் மாற்றங்கள் செய்து நம்மை மாய வலையில் சிக்கவைத்துவிடுவார்கள்.
காவல் நிலையத்தில் இவ்வாறாக வரும் சில நபர்களின் வழக்குப்பதிவுகளின் விபரத்தை மட்டும் வைத்தே காவல் துறையினர் விசாரணை செய்வார்கள். அவர்களின் கவனத்திற்கு வராத வழக்குகள் ஏராளம் என்று தெரிந்தாலும், அவர்களால் பதிவு செய்யப்படாத வழக்குகள் குறித்து விசாரணை செய்ய இயலாது. ஏனெனில் அவர்களுக்கு இது போன்று பிற வழக்குகளின் விசாரணையும் தேங்கி இருக்கும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி டேட்டிங் என்ற மாய வலைக்குள் விபரம் புரியாமல் விழுந்தால், வெளியே வர முடியாமல் தவிக்கும் சூழல் தற்கொலை வரை செல்லலாம். ஆகவே அனைவரும் சுதாரித்து செயல்படுங்கள். ஆபாச தளங்களில் உள்ள ஆபாச படங்கள் எப்படி முன்னதாக திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டு, நம்மிடையே உண்மையில் நடப்பது போல காட்சிப்படுத்தப்படுகிறதோ அதைப்போலத்தான் டேட்டிங் செயலிகளும். உண்மை தெரியவில்லை என்றால் மன உளைச்சல் தற்கொலை வரை கூட்டிச்செல்லும் என்பதே நிதர்சனம்.
ஒரு சில விஷயங்களில் அடுத்தவரின் அனுபவங்களை பார்த்து சுதாரித்து செயல்படுவது நல்லது. அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று விளையாட்டுத்தனமாக அல்லது வேண்டும் என்ற சோதனை செய்து பார்த்தால், சோதனையின் முடிவில் என்ன மாதிரியான விபரீதம் வரும் என்பது சோதனையின் முடிவில் மட்டுமே தெரியவரும் என்பதே நிதர்சனம்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dating App Dangers in Tamil