சுங்கச்சாவடிகளில் பணம் செல்லாது...! பாஸ்டேக் கட்டாயம், இல்லையெனில் கூடுதல் கட்டணம்...! - மத்திய அரசின் புதிய நடைமுறை
Cash not accepted at toll booths Fastag mandatory otherwise additional charges New policy Central Government
ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பெரும் மாற்றம் அமலுக்கு வருகிறது. ரொக்கப் பரிவர்த்தனைகள் முழுமையாக நீக்கப்பட்டு, இந்தியாவின் நெடுஞ்சாலைப் பயணம் முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவுக்கு மாறுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இந்த புதிய திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி, பாஸ்டேக் பயன்பாட்டை அதிகரிக்க பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதன் மூலம் அடிக்கடி பயணம் செய்பவர்கள் வேகமாகவும், தடை இல்லாமலும் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.மேலும், நாடு முழுவதும் சுமார் 1,200 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தினசரி பாஸ்டேக் வழியாக நடைபெறும் பரிவர்த்தனைகள் 1.16 கோடியை எட்டியுள்ளது. 2025-26ஆம் ஆண்டில் சுங்க வசூல் 82,900 கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்படுகிறது.

இந்த சூழலில், சுங்கச்சாவடிகளில் ரொக்கம் செலுத்தும் நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு முன்பே அறிவித்திருந்தது. அதன்படி, ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அனைத்து பரிவர்த்தனைகளும் பாஸ்டேக் அல்லது பிற மின்னணு முறைகள் மூலமாக மட்டுமே நடைபெறும்.இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பரிவர்த்தனை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ், பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் யு.பி.ஐ. மூலம் கட்டணம் செலுத்தலாம். ஆனால் வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும்” என்று தெரிவிக்கப்படுகிறது.மேலும், எந்தவொரு வாகனமும் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்த தவறினால், அந்த வாகனத்தை சுங்கச்சாவடிக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ காவலர்கள் அனுமதிக்க மறுக்கலாம். இதுகுறித்து வாகன உரிமையாளருக்கு மின்னணு அறிவிப்பு அனுப்பப்படும்.
மூன்று நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால், இருமடங்கு தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.அரசு பணிகளுக்காக பயணம் செய்யும் அரசு வாகனங்களுக்கு மட்டும் சுங்கக் கட்டண விலக்கு வழங்கப்படும். இந்த சலுகையை பெற முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் அல்லது ஆண்டு பாஸ் பெற்றிருக்க வேண்டும்.
தனிப்பட்ட பயணங்களுக்கு அரசு அதிகாரிகள் இந்த விலக்கை பயன்படுத்த முடியாது. அடையாள அட்டை காட்டி அனுமதி பெறும் பழைய நடைமுறை இனி செல்லாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.பாஸ்டேக் ஆண்டு பாஸை பெற, வாகன ஓட்டிகள் “ராஜ்மார்க் யாத்ரா” செயலி அல்லது NHAI மற்றும் MoRTH அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது, பாஸ்டேக் இணைக்கப்பட்ட கணக்கில் உள்நுழைந்து, வாகன விவரங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்து, UPI, டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.கட்டணம் செலுத்தியதும், பாஸ் தானாகவே பாஸ்டேக்குடன் இணைக்கப்பட்டு, பொதுவாக 24 மணி நேரத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும். இந்த ஆண்டு பாஸ் ஒரு வருட காலம் அல்லது 200 சுங்கச்சாவடி கடப்புகள் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Cash not accepted at toll booths Fastag mandatory otherwise additional charges New policy Central Government