இது அரசியல் மேடை அல்ல! - ஆளுநருக்கு எதிரான மாணவியின் நடத்தை மீது High Court நடவடிக்கை..!
This not political platform High Court action students behavior against Governor
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழா, எதிர்பாராத சர்ச்சையால் மாநிலம் முழுவதும் பேசப்பட்ட நிகழ்வாக மாறியது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, மாணவர்களுக்குப் பட்டச்சான்றுகள் வழங்கிக் கொண்டிருந்தபோது, விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது.
முனைவர் பட்டம் பெற்றுக்கொள்ள மேடையேறிய மாணவி ஜீன் ஜோசப், ஆளுநரிடம் பட்டத்தை பெற மறுத்து, பக்கத்தில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் தன் பட்டச்சான்றை கையளித்து உடனே மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். விழா நெறிமுறைகளை முற்றிலும் புறக்கணித்த அவரது இந்த நடத்தை, சமூக வலைதளங்களில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியது.

பின்னர், சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட தனது கருத்தில், “தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநரிடமிருந்து பட்டம் பெற விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தது மேலும் விவாதத்திற்கு தூண்டுகோலாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஜீன் ஜோசப், நாகர்கோவில் நகர திமுக துணை செயலாளர் ராஜனின் மனைவி என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த சர்ச்சை சூடுபிடித்த நிலையில், ஜீன் ஜோசப்பின் முனைவர் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த மனுவில், “பட்டமளிப்பு விழா அரசியல் மேடையாக பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று வலியுறுத்தப்பட்டது.
மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு,“பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் விதமான நடத்தை அனுமதிக்க முடியாது. பல்கலைக்கழகத்தின் மதிப்பையும், இளைய தலைமுறைக்கு வழங்க வேண்டிய நெறிமுறைகளையும் காக்க தெளிவான வழிகாட்டு நெறிகள் தேவையானவை.
இதுபோன்ற சூழ்நிலைகளில் துணைவேந்தருக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் பல்கலைக்கழக விதிகளில் உண்டா?” என்று கேள்வி எழுப்பியது.இந்தக் கேள்விகளுக்கான பதிலை மனுதாரரும் பல்கலைக்கழக தரப்பும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அதே நாளில் வழக்கு விசாரணைக்கு பொருத்தமானதா என்பதுடனும், வழக்கின் தொடர்ச்சி குறித்தும் தீர்மானிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
English Summary
This not political platform High Court action students behavior against Governor