கொள்ளையடித்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு வாரி வழங்கிய கொள்ளையன்!
The robber who donated the stolen money for the education of poor students
கொள்ளையடித்த பணத்தை ஏழை மாணவர்களின் கல்விக்கு வாரி வழங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள பேகூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல கொள்ளையன் ஷிவு என்கிற சிவராப்பன். இவன் தனது கூட்டாளிகளான அனில் மற்றும் விவேக் ஆகியோருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஷிவு மீது மட்டும் குறைந்தது 11 வழக்குகள் உள்ளன.இவர்கள் 3 பேரும் வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் 3 பேரும் திருடிய சுமார் 260 கிராம் தங்கத்தை போலீசார் மீட்டனர். அதில் ஒரு பகுதி தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது ஷிவுவிடம் விசாரணை நடத்தியபோது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.அவர் கூறுகையில், அவமானம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இருப்பினும் எதையாவது செய்ய வேண்டும் என கருதி கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டேன்.
அப்போது தனது பகுதியில் உள்ள குடும்பங்களின் அவலநிலையை கண்டு திருடப்பட்ட பணத்தை கொண்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 20 ஏழை மாணவர்களின் கட்டணத்தை செலுத்த பயன்படுத்தினேன். மாணவர்களின் கல்விக்காக சுமார் ரூ.14 லட்சம் செலவிட்டேன்.
திருடப்பட்ட தங்கத்தை விற்று சுமார் ரூ.22 லட்சம் சம்பாதித்தேன். மாணவர்களுக்கு நிதியுதவி செய்ததை தவிர, தனது 2 உதவியாளர்களுக்காக ரூ.4 லட்சம் மதிப்புள்ள 2 ஆட்டோரிக்ஷாக்களை வாங்கியதாக கூறினார்.
கைது செய்யப்பட்ட திருடர்களிடமிருந்து நாங்கள் எல்லா வகையான கதைகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம்.உண்மைகளை கண்டறிய நாங்கள் ஆழமாக ஆராய்வோம். அவரது நோக்கம் எதுவாக இருந்தாலும் ஒரு குற்றம் நடந்துள்ளது. அவரது கூற்றுகளை நாங்கள் சரிபார்த்து வருகிறோம் என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
English Summary
The robber who donated the stolen money for the education of poor students