'வெடி மருந்து கலக்கும் பணிகளை காலை 10 மணிக்குள் முடிக்க வேண்டும்'; விபத்துகளை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்..!
The Central Government has emphasized that the mixing of explosives must be completed by 10 AM
நாட்டில் பல மாநிலங்களில் இயங்கும் பட்டாசு ஆலைகளில் வெயில் கால விபத்துகளைத் தவிர்க்க புதிய பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்கனவே நடந்த தொடர் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த 21-ஆம் தேதி நீதிமன்றம் முக்கிய ஆலோசனைகளை வழங்கியது. முன்னதாக சமீபத்தில் கேரளாவின் திருச்சூர், தமிழ்நாட்டின் சிவகாசி போன்ற பகுதியில் நடந்த பட்டாசு வெடி விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர்.
கோடைக்காலத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் உராய்வினால் ரசாயனங்கள் தானாகவே தீப்பற்றி வெடிப்பதைத் தவிர்க்க, வெடி மருந்து கலக்கும் பணிகளை அதிகாலை 06 மணி முதல் காலை 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என ‘பெசோ’ எனப்படும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் பட்டாசு உற்பத்தியைத் தற்காலிகமாகத் தடை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது மத்திய அரசின் வெடிபொருள் திருத்த விதிகளின்படி, பட்டாசு ஆலைகளில் மருந்து கலக்கும் அறையில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 02 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில், விபத்து நடந்தால் உயிர்ச் சேதத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், மருந்து கலக்கும் இடங்கள் மற்றும் இருப்பு வைக்கும் அறைகள் மற்றக் கட்டிடங்களில் இருந்து தனித்தனி பிரிவுகளாக இருக்க வேண்டும் என்றும், ரசாயனங்களின் வீரியம் மதிய நேரங்களில் உச்சத்தை எட்டுவதால், இந்த விதிகளை மீறும் ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
The Central Government has emphasized that the mixing of explosives must be completed by 10 AM