நாங்கள் பீகாரிகள் அனைவரையும் விட உயர்ந்தவர்கள்; 2029-இல் ராகுலை பிரதமர் ஆக்குவோம்: தேஜஸ்வி யாதவ் சூளுரை..!
Tejashwi Yadav vows to make Rahul the Prime Minister in 2029
பிரதமர் மோடியை தூங்கவிடாமல் செய்யும் அளவிற்கு காங்கிரஸ் ராகுல்காந்தியை 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமராக்குவோம் என தேஜஸ்வி யாதவ் சூளுரைத்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கடந்த ஆகஸ்டு 17 முதல் பீகாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பீகாரின் நவாடாவில் நடந்த பேரணியில் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது;- தேர்தல் ஆணையமும் பாஜகவும் வாக்குகளைத் திருடவும், பீகார் மக்களை முட்டாளாக்கவும் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர் என்றும், பீகாரிகளின் வாக்களிக்கும் உரிமையை பாஜக பறிக்க விரும்புகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், நாங்கள் பீகாரிகள். ஒரு பீகாரி அனைவரையும் விட உயர்ந்தவர் என்றும், சிறப்பு தீவிர திருத்தம் மூலம், பீகாரில் உயிருடன் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கி, அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்து பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வரைவு வாக்காளர் பட்டியல்களில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும், சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்குகளின் கொள்ளை, அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கம் மிக மோசமாகிவிட்டது என்றும், அதை அவசரமாக மாற்ற வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும், இந்த பழைய மற்றும் மோசமான அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவோம் என்று இளைஞர்கள் தீர்மானித்து விட்டனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Tejashwi Yadav vows to make Rahul the Prime Minister in 2029