மும்பை மாநகராட்சி தேர்தல்; வெற்றியாளர்களை முடிவு செய்யும் தமிழர்கள் வாக்குகள்..!
Tamil votes will decide the winners in the Mumbai municipal elections
மும்பை மாநகராட்சி தேர்தல் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒரு மினி சட்டமன்றத் தேர்தலை போன்றது இந்த தேர்தல். ஏனெனில், பல்வேறு மொழியினர், சமூகத்தினர், மதத்தினர் என பன்முகத் தன்மை கொண்ட வாக்காளர்களின் பங்களிப்புடன் இத்தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில், வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் 12 லட்சம் தமிழர்களின் வாக்குகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மும்பை மாநகராட்சியில், பல்வேறு வார்டுகளில் கடும் இழுபறி நீடிக்கும் நிலையில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியாளர்களை முடிவு செய்யும் நிலையில் உள்ளது. குறிப்பாக தாராவி, சியான் கோலிவாடா போன்ற பகுதிகளில் தமிழர்கள் ஆதரவின்றி எக்கட்சியும் வெல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதுதவிர செம்பூர், அந்தேரி, பாண்டுப், குர்லா, மலாட் போன்ற பகுதிகளிலும் தமிழர்கள் வாக்குகள் கவனம் பெறுகின்றன. குறைந்தது 12% முதல் அதிகபட்சம் 25% வரை ஒவ்வொரு வார்டிலும் தமிழர்கள் வாக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 227 வார்டுகளில் 35 வார்டுகளில் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் வாக்குகள் உள்ளன.

இந்நிலையில், தமிழர்களை வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கும் நிலை மாறி அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் நிலை மும்பை மாநகராட்சி தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணாமலை போன்ற தமிழக பாஜக தலைவர்களை அழைத்து வந்து பாஜக பரப்புரை செய்கிறது. இந்நிலையில், தங்கள் பாரம்பரிய வாக்கு வங்கியான தமிழர்கள் வாக்குகள் சிதறாமல் பெற காங்கிரஸ் காய் நகர்த்துகிறது.
அதேப்போன்று தாராவி மறுசீரமைப்பு திட்டம், கல்வி, குடிநீர், கழிவுநீர் அகற்று வசதி, தமிழ்வழிக் கல்வி தொடருதல் போன்ற கோரிக்கைகளே மும்பை தமிழர்களின் பிரதான தேர்தல் எதிர்பார்ப்புகளாக உள்ளன. மஹாராஷ்டிரா மண்ணின் மைந்தர்களான மராத்திகள், வட இந்தியர்கள் என இரு களங்களை கொண்டதாக மும்பை தேர்தல் உள்ளது. இந்த நிலையில் அதில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் வாக்குகள் முக்கியத்துவம் பெறுவது இத்தேர்தலை கவனம் ஈர்ப்பதாக மாற்றியுள்ளது.
English Summary
Tamil votes will decide the winners in the Mumbai municipal elections