'தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் கிராமங்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்': தேசிய அளவிலான சீரான கொள்கை வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!
Supreme Court orders that private college medical students must also work in villages
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தனியார் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் தனியார் ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் பயிலும் மருத்துவ மாணவர்களும் ஓராண்டு காலத்துக்கு கிராமப்புறங்களில் பணியாற்றினால் மட்டுமே மருத்துவராக பதிவு செய்ய முடியும் என்ற அரசாணையை கர்நாடக அரசு வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு குறித்த விசாரணைக்கு வந்தது. அப்போது கிராமப்புறங்களில் பணியாற்றுவதிலிருந்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஏன் விலக்களிக்கப்பட வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு மனுதாரர்கள் தரப்பில் வாதிடுகையில், தனியார் ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர்ந்து மிக அதிகக் கட்டணம் செலுத்தி மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின் கீழ் சேர்க்காமல் ''தெளிவாக வேறுபடுத்திக் காணக்கூடிய ஒரு தனிப்பிரிவாக'' கருதப்பட வேண்டும் என்றும், அவர்களை கிராமப்புறங்களில் கட்டாயப் பணி செய்ய வேண்டுமென்ற நிபந்தனைக்கு உட்படுத்தப்படக் கூடாது எனவும் கூறப்பட்டது.
ஆனால், அந்த வாதத்தை நீதிபதிகள் அமர்வு ஏற்க மறுத்துள்ளது. அத்துடன், கிராமப்புறங்களில் மருத்துவ மாணவர்கள் பணியாற்றுவதை கட்டாயமாக்க தேசிய அளவில் ஒரு சீரான கொள்கை இருக்க வேண்டும் என்றும்நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது பேசிய, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாடு தழுவிய இத்தகைய கொள்கையை வகுப்பது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து உரிய அறிவுறுத்தல்களைப் பெற்றுத் தெரிவிப்பதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் வகையில் தேசிய அளவிலான சீரான கொள்கையை வகுப்பது குறித்து 03 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.
English Summary
Supreme Court orders that private college medical students must also work in villages