போலியாக அல்லது மோசடியாக ஆதார் வாங்கிய ஊடுருவல்காரர் ஒருவரால் ஓட்டளிக்க முடியுமா..? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி..!
Supreme Court asks whether an intruder who has obtained a fake or fraudulent Aadhaar card can vote.
போலியாக அல்லது மோசடியாக ஆதார் அட்டை வாங்கியதால், ஊடுருவல்காரர் ஒருவரால் ஓட்டளிக்க முடியுமா..? என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பீஹாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டு, சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., பணி நடந்து வருகிறது. இந்தப் பணியை, வரும் 04-ஆம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் நடத்தப்படும் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகள் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் நேற்று (நவம்பர் 26) விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில், பதில் மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., தொடர்பான மனுக்கள் மீது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, படிவம் 06-இல் வாக்காளர்களால் அளிக்கப்படும் விண்ணப்பங்களை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, மனுதாரர்கள் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை அமர்வு நீதிபதிகள் கூறியதாவது: தங்களிடம் வரும் அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்க, தேர்தல் ஆணையகம் ஒன்றும் போஸ்ட் ஆபிஸ் அல்ல என்றும், வாக்காளர்கள் படிவம் 06-இல் சமர்ப்பிக்கும் அனைத்து விபரங்களையும் சரிபார்க்க தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஆதார் என்பது குடியுரிமைக்கான உறுதியான சான்று இல்லை. இது, அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், அதை வைத்து எப்படி வாக்காளர் ஆக முடியும்..? பிழைப்பு தேடி இங்கு வந்தவர்கள், ஆதாரை வைத்திருந்தால் மட்டும் ஓட்டளித்து விட முடியுமா,,? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதாவது, ஒருவர் அண்டை நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தொழிலாளியாக இங்கு வேலை செய்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்; போலியாக அல்லது மோசடியாக அவர் ஆதார் வாங்கியிருக்கலாம். அதற்காக அவரை ஓட்டளிக்க அனுமதிப்பீர்களா..? எனவே, ஆதார் என்பது அடையாள ஆவணம் மட்டுமே. என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Supreme Court asks whether an intruder who has obtained a fake or fraudulent Aadhaar card can vote.