நெட்டிசன்கள் மத்தியில் ‘ட்ரெண்ட்’ ஆன நேரத்தில் அதிர்ச்சி...! சிஜேபி (CJP) கட்சியின் ‘எக்ஸ்’ (X) பக்கம் அதிரடி முடக்கம்...! - பின்னணி என்ன...?
Shocking moment when it became trend among netizens CJP party x page suspended What background
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்த கருத்து, நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கடும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.அந்த விசாரணையின்போது பேசிய அவர், “சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப் போல பல அமைப்புகளுக்குள் ஊடுருவி, சமூக வலைதள போராளிகளாக மாறி நீதித்துறை மற்றும் ஊடகங்களை தாக்குகின்றனர்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அவர் விளக்கம் அளித்தார். அதில், “போலி சான்றிதழ்கள் மூலம் நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்குள் நுழையும் சிலரை பற்றித்தான் நான் குறிப்பிட்டேன்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகள் காரணமாக இளைஞர்கள் மனஅழுத்தத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கும் சூழலில், இந்த கருத்து மேலும் சர்ச்சையை தீவிரப்படுத்தியதாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதன் எதிரொலியாக, “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் நையாண்டி அரசியல் இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. மே 16-ஆம் தேதி அபிஜீத் தீப்கே என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சில நாட்களிலேயே இளைஞர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பைப் பெற்றது.கட்சியின் தொடக்கத்திற்குப் பின்னர் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் இதில் இணைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த இயக்கத்தின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்தொடர தொடங்கினர்.“இளைஞர்களின் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு நெருக்கடி, கல்வி மற்றும் சமூக சவால்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது” என்று அதன் நிறுவனர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் திடீரென முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. முடக்கப்படுவதற்கு முன்பு அந்த பக்கத்தை 1.65 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தனது சமூக வலைதள பதிவில், “இந்த நடவடிக்கை எங்களுக்கு ஆச்சரியமில்லை; இது முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அந்த இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் 1.26 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை பெற்று வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது, 87 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை விட பல மடங்கு அதிகம் என்பதும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Shocking moment when it became trend among netizens CJP party x page suspended What background