பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பெட்ரோலியத் துறை அமைச்சர் பேச்சால் அதிர்ச்சி..!
Shock over Petroleum Ministers remarks regarding the hike in petrol and diesel prices
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் வகையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணுஆயுத போட்டி காரணமாக அமெரிக்கா+ இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர் சுமார் 1 மாதம் நீடித்தது. இந்த போரின் பதிலடின் ஒரு பகுதியாக ஈரான் உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து தடமான ஹோர்முஸ் நீரிணையை முடக்கி உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இதன் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்க்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதில் இந்தியாவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் இறக்குமதி வளைகுடா நாடுகளை நம்பி இருந்த நிலையில், இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் வருகை கடுமையான பாதிக்கப்பட்டது.

இந்த இக்கட்டான சூழலில், சமாளிக்க வெனிசுலா மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் விலைக்கு இந்தியா அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தன. அத்துடன், 05 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு விரும்பவில்லை.
இந்நிலையில் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்வதால் நாளொன்றுக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதனை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியாது என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக 05 மாநில தேர்தல்கள் முடிவடைந்ததும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறியுள்ளது தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இதன் காரணமாக விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.
English Summary
Shock over Petroleum Ministers remarks regarding the hike in petrol and diesel prices