உபா (UAPA) சட்டப் பிடியில் இருப்பவர்களுக்கு நிம்மதி...இனி ஜாமீன் சாத்தியம்...! - உச்சநீதிமன்றத்தின் அதிரடி
Relief for those under UAPA law bail now possible Supreme Court action
ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கியதாக தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த வழக்கில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குப்வாரா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முக்கிய கருத்துகளை பதிவு செய்தனர்.
“உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் கூட ஜாமீன் வழங்கப்படுவது தான் இயல்பான நடைமுறை; சிறைவாசம் விதிவிலக்காக இருக்க வேண்டும்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் நீண்டகாலம் ஒருவரை சிறையில் வைத்திருப்பது நீதிக்கே எதிரானது” என அவர்கள் சுட்டிக்காட்டினர்.மேலும், “உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் வெறும் 6 சதவீதம் பேருக்கு மட்டுமே குற்றங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதனால் விசாரணை முடிவடையாத நிலையில் ஜாமீன் மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மனுதாரரான சையத் இப்திகார் அன்ட்ராபிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. அதேசமயம், தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் காவலர் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Relief for those under UAPA law bail now possible Supreme Court action