மத்திய ரயில்வே இணை-அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள ரவ்னீத் சிங் பிட்டு..!
Ravneet Singh Bittu resigns as Union Minister of State for Railways
மத்திய ரயில்வே இணை-அமைச்சர் பதவியிலிருந்து ரவ்னீத் சிங் பிட்டு விலகியுள்ளார். அவரது விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்த நிலையில், அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். கடந்த 2024 ஆகஸ்ட் முதல் தற்போது வரை மத்திய இணை-அமைச்சராக அவர் பணியாற்றினார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரவ்னீத் சிங் பிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2024-இல் தேர்வு செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மாநில தேர்தலில் கவனம் செலுத்தும் வகையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

50 வயதான அவர், மூன்று முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். கடந்த 2024-இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அவர், பாஜகவில் இணைந்தார். 2017-இல் பேரவை தேர்தலிலும், 2024-இல் மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி கண்டார். இந்த சூழலில் தற்போது மத்திய இணை-அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
இந்நிலையில், ''மத்திய இணை அமைச்சராக தேசத்துக்கு பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொது வாழ்வில் எனது பணி தொடரும்'' என்று ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.
English Summary
Ravneet Singh Bittu resigns as Union Minister of State for Railways